பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள தவெக வேட்பாளரும், உழவர் உரிமை இயக்க மாநில தலைவருமான அருள் ஆறுமுகம், “உங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐந்து ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் விஜய் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் தற்போது நிபந்தனைகளுடன் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அருள் ஆறுமுகம், “இது விவசாயிகளுக்கு செய்யப்படும் துரோகம். நீங்கள் வெறும் வாக்குறுதி அளிக்கவில்லை, உத்தரவாதம் அளித்தீர்கள் என்பதை முதலமைச்சர் விஜய் மறக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “விவசாயத்தைப் பற்றி முழுமையாக அறியாமல், ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் உங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
உடனடியாக சிறு, குறு விவசாயிகளின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் அருள் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
