https://republictn.com/

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் சுமார் 2,500 லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான லோடுகளில் கனிம வளங்கள் தினமும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நடைமுறை அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களிலும் தொடர்ந்து நடந்ததாக கூறும் பொதுமக்கள், தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கனிம வளத்துறை அமைச்சர் பிரபு உடனடியாக புளியரை பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதான் மக்களின் கோரிக்கைகளின் உண்மை நிலை புரியும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நாகர்கோவில் வழியாக சென்ற கனரக வாகனங்கள் தற்போது புளியரை வழியாக அதிக அளவில் இயக்கப்படுவதாகவும், ஒரு நாளுக்கு சுமார் 2,500 லாரிகள் வரை இந்த வழியாக செல்வதாகவும் கூறப்படுகிறது.

அதிக பாரத்துடன் கனிம வள லாரிகள் இயக்கப்படுவதால் செங்கோட்டை முதல் கோட்டவாசல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து எழுந்த போராட்டங்களின் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் கனிம வள லாரிகள் இயக்கத்திற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை லாரிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 4 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேரக் கட்டுப்பாடு மட்டும் போதாது; கனிம வள கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் நேரடியாக புளியரை பகுதிக்கு வந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கேரளாவிற்கு செல்லும் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கனிம வள லாரிகளுக்கு எந்தவித கடுமையான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

எனவே, புதிய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கனிம வள கடத்தலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago