சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் இரண்டாவது பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருள்மிகு ராஜ கணபதி ஆலயத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 11 மணியளவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஊர்வலம் வெங்கடேஸ்வரா நகர் இரண்டாவது தெருவில் சுமார் 11.30 மணியளவில் சென்றபோது, அந்தத் தெருவின் பாதி தூரம் வரை மட்டுமே சிலை ஊர்வலம் சென்றுவிட்டு, பின்னர் மற்றொரு தெருவுக்குச் செல்வதற்காக திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அதே பகுதியில் வசித்து வரும் ஒரு தரப்பினர், விநாயகர் சிலை ஊர்வலத்தை தங்களது தெரு முழுவதும் சுற்றி வர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியிலுள்ள இரண்டாவது பிரதான சாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சிலரை வீட்டில் இருந்து கீழே வருமாறு அழைத்து, இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த மோதலில் ஆனந்த் என்பவர், எம்ஜிபிசி ஓட்டுநரான சீனிவாசன் என்பவரை மார்புப் பகுதியில் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் சீனிவாசன் சுயநினைவிழந்து கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சீனிவாசனை உடனடியாக மீட்டு இருசக்கர வாகனம் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கே.கே. நகர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோதல் மற்றும் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
