பெங்களூர் அவலஹள்ளி எல்லப்பா கார்டனில் வசித்து வந்தவர் முபாரக். இவரது மனைவி ஷாஹினா பானு. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முபாரக் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுக்கையிலேயே முடங்கினார். குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த நஹிம் குரேஷி என்பவர் இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஷாஹினா பானுவிற்கும் நஹிம் குரேஷிக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் முபாரக் வீட்டில் படுக்கையில் இருக்கும் போதே இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை முபாரக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஹினா பானு, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காக தனது கள்ளக்காதலன் நஹிம் குரேஷி மற்றும் தாய் ஹசீனா ஆகியோரின் உதவியை நாடினார். திட்டமிட்டபடி, கடந்த 9-ம் தேதி படுக்கையில் இருந்த முபாரக்கை மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
பின்னர், முபாரக் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாட முயன்றனர். ஆனால், அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவலஹள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முபாரக்கின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ஷாஹினா பானு தனது தாய் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

