ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுக்கு எஸ்யு-57 ஸ்டெல்த், எஸ்யு-30MKI, எஸ்-400 IADS ஆகிய போர் விமானங்களை வழங்கியது மட்டுமல்லாமல், பான்சிர்- எஸ்எம்ஐ குறுகிய தூர ஏவுகணை அமைப்பு, அகுலா வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், வொரோனெஷ்-எம் உத்திசார் ரேடார் ஆகியவற்றையும் இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளார்.
வொரோனெஷ்-எம் ரேடார் சுமார் 6,000 முதல் 8,000 கிலோமீட்டர் வரையிலான வரம்பைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது, எஸ்-400 போன்ற ஏவுகணை அமைப்புகளையும் தயாரிக்கும் புகழ்பெற்ற ரஷ்ய விண்வெளி, பாதுகாப்பு நிறுவனமான அல்மாஸ்-ஆண்டேயால் தயாரிக்கப்படுகிறது. இந்த ரேடார், விண்வெளி, வான்வெளியில் நீண்ட தூரக் கண்காணிப்பை மேற்கொள்வதன் மூலம் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள், போர் விமானங்களின் இயக்கங்களைக் கண்காணிக்கிறது.
டிசம்பர் 2024-ல், கர்நாடகாவின் சித்ரதுர்காவில் ரஷ்யாவின் வொரோனெஷ் பாலிஸ்டிக் ஏவுகணை முன்னறிவிப்பு ரேடாரை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும் ரஷ்யாவும் இறுதி செய்து கொண்டிருந்தன. அல்மாஸ்-ஆண்டே நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரேடாரை 4 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னேறிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் இந்திய விமானப்படை விமானியும் விமானவியல் வடிவமைப்பாளருமான விஜயேந்திர கே. தாக்கூர் கூறுகையில், ”வொரோனெஷ் ரேடார் அமைப்பானது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்டதுடன், விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களையும் வழங்குகிறது.
இந்த ரேடார்கள் ஃபேஸ்டு-அரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது மின்னணு கற்றையை வேகமாகச் சுழற்ற அனுமதிக்கிறது. இது, டினெப்ர், டாரியல் ரேடார்கள் போன்ற பழைய அமைப்புகளை விட இவற்றை கணிசமாக அதிக சக்தி வாய்ந்ததாகவும், இயந்திர ரீதியாக குறைந்த சிக்கலானதாகவும் ஆக்குகிறது. அவற்றின் தனித்துவமான அம்சங்களில் சிறிய அளவு, குறைந்த மின் நுகர்வு, முந்தைய தலைமுறைகளை விட குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யக்கூடிய திறன் ஆகியவை அடங்கும்.
வொரோனெஷ் அமைப்பின் முக்கியத்துவம், அது பரந்த பகுதிகளை உள்ளடக்கும் திறனில் அடங்கியுள்ளது. ரஷ்யா முழுவதும் பரவியுள்ள அதன் முக்கிய அலகுகள் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காவை உள்ளடக்கும் திறன் கொண்டவை. இந்த வலையமைப்பு, சாத்தியமான ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக ரஷ்யாவிற்கு ஒரு வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. சரியான நேரத்தில் கண்டறிந்து எச்சரிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது இந்தியாவில் நிறுவப்பட்டால், பாகிஸ்தான் முழுவதையும், சீனாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியையும் உள்ளடக்கும்.
வொரோனெஷ் ரேடார்களில் வொரோனெஷ்-எம், வொரோனெஷ்-டிஎம் மற்றும் வொரோனெஷ்-எஸ்எம் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கண்டறியும் பணிக்காகவோ அல்லது மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காகவோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
வொரோனெஷ்-எம் (VHF பேண்ட்) – நீண்ட தூர கண்டறிதலுக்காக உகந்ததாக்கப்பட்டது. ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த தெளிவுத்திறனைக் கொண்டது. இந்த ரேடார் நடுத்தர, நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வொரோனெஷ்-டிஎம் (UHF பேண்ட்) – சிறிய இலக்குகளுக்கு மேம்படுத்தப்பட்ட தெளிவுத்திறனையும் கண்காணிப்புத் துல்லியத்தையும் வழங்குகிறது.
வொரோனெஷ்-எஸ்எம் (எல்-பேண்ட்) மற்றும் வொரோனெஷ்-விபி – துல்லியமான கண்காணிப்பு மற்றும் தேவையற்ற சிக்னல்களை அகற்றுதல் (கிளட்டர் ரிஜெக்ஷன்) ஆகியவற்றுக்கான மேம்படுத்தப்பட்ட திறன்கள். வொரோனெஷ்-விபி ரேடாரால், வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், குரூஸ் ஏவுகணைகள் போன்ற தாழ்வாகப் பறக்கும் இலக்குகளையும் மிகத் தொலைவிலிருந்து கண்காணிக்க முடியும். இது ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிர்வினையாற்றப் போதுமான நேரத்தை வழங்குகிறது.
பல்வேறு வொரோனெஷ் ரேடார்கள் ஒரு ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதல் முன் எச்சரிக்கை அமைப்பின் ஒரு பகுதியாக இணைந்து செயல்பட முடியும். அவை சாத்தியமான ஏவுகணை அச்சுறுத்தல்கள், விண்வெளிச் செயல்பாடுகள் குறித்த ஒரு முழுமையான ரேடார் சித்திரத்தை உருவாக்க முடியும். ஒவ்வொரு வொரோனெஷ் ரேடாரும் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியைக் கண்காணித்து, சுதந்திரமாகச் செயல்படும். இலக்கின் பாதை, வேகம் மற்றும் வகைப்பாடு போன்ற சேகரிக்கப்பட்ட தரவுகள் ஒரு மையச் செயலாக்க மையத்திற்கு அனுப்பப்படுகின்றன.
இந்த மைய அமைப்பு, இந்தத் தகவல்களை மற்ற ரேடார்கள், செயற்கைக்கோள்கள், சென்சார்களில் இருந்து வரும் தரவுகளுடன் இணைத்து, கண்காணிக்கப்படும் முழுப் பகுதியின் ஒருங்கிணைந்த, நிகழ்நேர ரேடார் சித்திரத்தை உருவாக்குகிறது. வொரோனெஷ் ரேடார்களின் பார்வைப் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும் வகையில் அவை உத்தியோகபூர்வமாக வைக்கப்பட்டுள்ளன. இது காப்புறுதியை வழங்குவதோடு, அச்சுறுத்தல்களைக் கண்டறிவதில் உள்ள துல்லியத்தையும் மேம்படுத்துகிறது.
