பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் வையாபுரி, சமூக வலைதளங்களில் தனக்கு கணக்கு இல்லை என்பதற்காக பிரபல இயக்குநர் ஒருவர் தன்னை சந்திக்க மறுத்து அவமானப்படுத்தியதாகக் கூறி, நேர்காணல் ஒன்றில் கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜெமினி’, ‘போக்கிரி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வையாபுரி. பல ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பட வாய்ப்பு தொடர்பாக, பெரிய தயாரிப்பு மேலாளர் ஒருவர் வையாபுரியை பிரபல இயக்குநர் ஒருவரிடம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இயக்குநர் வையாபுரியை நேரில் சந்திக்க மறுத்துள்ளார். மேலும், அவர் பழைய கலைஞர் என்றும், தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பல புதியவர்கள் சினிமாவுக்கு வருவதாகவும், வையாபுரிக்கு சமூக வலைதள கணக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களும் இல்லை என்றும் கூறி, அவரை சந்திக்க வேண்டாம் என தெரிவித்ததாக வையாபுரி கூறியுள்ளார்.
இந்த தகவலை தயாரிப்பு மேலாளர் மூலம் அறிந்த வையாபுரி, மிகவும் மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தனது நடிப்புத் திறமையின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய நிலையில், சமூக வலைதளப் பின்தொடர்பாளர்கள் இல்லை என்பதற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தன்னை பெரிதும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்றைய சினிமா சூழலில் சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வையாபுரி, புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு தன்னை நினைவுபடுத்தவும், தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இன்ஸ்டாகிராமில் இணைய முடிவு செய்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கிய ஒரே மாதத்திற்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த வையாபுரி, தான் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் அன்பையும் ஆதரவையும் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
“இன்ஸ்டா ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்று நினைக்கும்போது உண்மையிலேயே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பெரிய புரொடக்ஷன் மேனேஜர் என்னை இயக்குநரைப் பார்க்க அழைத்துச் சென்றார்.
அப்போது, ‘அவர் பழைய ஆர்டிஸ்ட், நான் இல்லை என்று சொல்லிவிடுங்கள்’ என்று இயக்குநர் கூறியதாக பின்னர் எனக்குத் தெரியவந்தது. அந்த சம்பவம் எனக்கு மிகவும் சங்கடமாகவும் மனவேதனையாகவும் இருந்தது” என்று வையாபுரி தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் நிறைய பேர் புதிதாக வருகிறார்கள். அதனால் நாமும் ஏன் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கக் கூடாது என்று தோன்றியது. புதிய இயக்குநர்களுக்கு நம்மை ஞாபகப்படுத்துவதற்காகவும், நம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இதை ஆரம்பித்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வையாபுரியின் கண்ணீர் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். திறமைக்கு முன்னால் சமூக வலைதளப் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல என்றும், வையாபுரி சிறந்த நகைச்சுவை நடிகர் என்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
வையாபுரி சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்த அவரது பழைய பேட்டிகளும் தற்போது வைரலாகி வருகின்றன. சினிமாவில் வாய்ப்புத் தேடி சென்னை வந்தபோது, தனது ஒல்லியான உடல்வாகைக் காரணம் காட்டி பலர் வாய்ப்பு வழங்க மறுத்ததாகவும், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மவுண்ட் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், எழுத்தாளர் சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’ நாடகம் மூலம் தூர்தர்ஷனில் அவருக்கு முதல் சின்னத்திரை வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னை சந்திக்க மறுத்ததாகக் கூறப்படும் இயக்குநரின் பெயரை வையாபுரி வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இதனால் அந்த இயக்குநர் யார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
வையாபுரியின் அனுபவம், இன்றைய சினிமா துறையில் நடிப்புத் திறமையைவிட சமூக வலைதளப் பின்தொடர்பாளர்கள் மற்றும் ‘சோசியல் மீடியா ரீச்’ முக்கியத்துவம் பெறுகிறதா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
