தமிழக அரசியலில் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் தவெக- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே, 2029 மக்களவைத் தேர்தலின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமர் விருப்பப் பட்டியலில் முதலமைச்சர் விஜய்க்கு கணிசமான ஆதரவு (9%) கிடைத்துள்ளதாகக் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், “2029-ல் இந்தியாவின் பிரதமரை டெல்லி தீர்மானிக்காது. தமிழகம்தான் தீர்மானிக்கும். 2029-ல் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்” என பகிரங்கமாகப் பேசத் தொடங்கினர்.
“ராகுல் காந்தியே விஜய்யின் கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்” என்றும் தவெக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. தவெகவின் இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கும் ஒரே முதன்மைத் தலைவர் ராகுல் காந்திதான் என்றும், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியே என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாங்கள் உடனடியாக அமைச்சரவையில் இருந்து விலகுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தில் விஜய் முதலமைச்சராக இருந்தாலும், தேசிய அளவில் ராகுல் காந்தியின் தலைமையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸின் கணக்கு. ஆனால் தவெகவினர் விஜய்யின் சினிமா செல்வாக்கையும், இளைஞர்களிடையேயான வரவேற்பையும் வைத்து அவரை தேசிய அரசியலுக்கு முன்னிறுத்த விரும்புகின்றனர். அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் இந்த மோதலைச் சுட்டிக்காட்டி, “கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வெடித்துள்ளதாகவும், தவெகவின் தேசியக் கனவு நடைமுறைக்குச் சாத்தியமற்றது” என்றும் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், ”நாட்டின் பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்; இதுதான் எங்கள் நிலைப்பாடு,” என காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் ஊழலற்ற அரசு வேண்டும் என்பதற்காகவே, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர். பிரதமர் வேட்பாளர் குறித்து தனிநபர் விருப்பமும் கட்சியின் நிலைப்பாடும் வேறு வேறு. நாட்டின் பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்; இதுதான் எங்கள் நிலைப்பாடு.

சட்டசபையில் எங்கள் கட்சி அமைச்சர் விஸ்வநாதன் பேசினாலே, தி.மு.க.,வினர் பேச விடாமல் கூச்சலிடுகின்றனர். இது நியாயமற்றது. தி.மு.க.,வினரை சபாநாயகர் எச்சரிக்க வேண்டும். தமிழக சட்டசபைக்கு, வருங்காலத்தில் பெண் சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும். அதையும் முதல்வர் விஜய் செய்வார். பா.ஜ.வின் தமிழக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பா.ஜ.,வை முடித்து வைக்கும் தலைவராக மாறிவிட்டார்” எனக் கூறினார்.
