Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் (NEET) தேர்வில் தொடர்ச்சியாக எழுந்துள்ள வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தக் கடிதத்தில், ஒரு துறையில் பெரிய தவறு அல்லது நிர்வாகத் தோல்வி ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்வது ஜனநாயகத்தின் அடிப்படை பொறுப்புணர்வு என அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார். இதனால் அரசு கவிழ்ந்துவிடாது அல்லது பலவீனமடையாது என்றும், மாறாக மற்ற அமைச்சர்களும் தங்களது துறைகளை அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக முறைகேடுகள் நடைபெறும் போது கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் நிர்வாகத் தோல்விக்கான இறுதிப் பொறுப்பை அமைச்சரே ஏற்க வேண்டும் என்பதே ஜனநாயக மரபு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  “உட்கட்சி குழப்பம் உச்சம் – அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா!”
Republic Tamil

கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் மாணவர்கள் நீட் முறைகேட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க முயல்வதற்குப் பதிலாக, அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அன்னா ஹசாரே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதும், கண்ணீர்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதும் ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் கோபத்தை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல், அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகக் கொள்கைகளை பின்பற்றி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கடிதம் எழுதியதோடு நிற்காமல், மகாராஷ்டிராவின் அகிலாநகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அன்னா ஹசாரே இரண்டு மணி நேர மௌன விரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வன்முறையால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்க  பாஜகவின் மிகப்பெரிய தலையை தூக்கிய CM விஜய்..! பெரும் படையுடன் தவெக-வுக்கு படையெடுப்பு..!
Republic Tamil

இதற்கிடையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, டெல்லி காவல்துறையினர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குடும்பத்தினரின் விருப்பப்படி மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற ‘சம்சத் சலோ’ பேரணிக்குப் பிறகு டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜந்தர் மந்தரில் திரண்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகைக் குண்டுகளையும் பயன்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவர் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் கான், அனன்யா பாண்டே, சாரா அலிகான் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க  "மோடி… மோடி …" கோஷங்களால் அதிர்ந்த மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை அசத்திய 'மிஸ்டர் இந்தியா'!
Republic Tamil

மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும், நீட் முறைகேடு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் 22 மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன அடங்குகின்றன.

இதற்கிடையில், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்து வருகிறது. விவாதத்திற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தாலும், கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் உறுதியாக தெரிவித்துள்ளன.

அன்னா ஹசாரேவின் இந்தக் கடிதமும், அவரது மௌனப் போராட்டமும், நீட் முறைகேடு விவகாரத்தில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளதுடன், மத்திய அரசின் மீது கூடுதல் அழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago