சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பு அரசியல், ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி, ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக, தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களில் மூன்றாவது விருப்பமாகஇடம்பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவரது பொது பிம்பத்தை உயர்த்த, ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் இத்தகைய கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கொண்டாடுவதும், அதைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும் முற்றிலும் இயல்பானதே. ஆனாலும், ஒரே ஒரு கருத்துக்கணிப்பை அடிப்படையாகக் கொண்டு, விஜய்யை ஒரு தேசிய ஆளுமையாக முன்னிறுத்தும் இந்த விளம்பர முயற்சியில் அவரது அமைச்சர்களே தீவிரமாக ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இதற்குப் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

பல்வேறு காரணங்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெற்று முதலமைச்சர் பதவியை அடைந்த ஒரு புதிய அரசியல் தலைவர் அவர். பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட அவரது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து, திமுக, அதிமுக ஆகியவற்றின் நீண்டகால ஆதிக்கத்திற்கு மாற்றாக ஒரு புதிய சக்தியைத் தமிழக வாக்காளர்கள் தீவிரமாக எதிர்பார்த்தது ஆகியவை அவரது சிறப்பான அரசியல் வருகைக்கும், அந்த முக்கிய பதவியை அவர் கைப்பற்றுவதற்கும் உதவின.
விஜய் தனது பதவிக்காலத்தின் சில மாதங்களிலேயே இருப்பதால், அவரது உண்மையான அரசியல் வலிமையை மதிப்பிடுவதற்கு இது மிக ஆரம்பக்கட்டமே ஆகும். நிர்வாகம், அரசியல் ரீதியாகப் பல சவால்கள் அவருக்கு முன்னால் உள்ளன. ஒரு மாநிலக் கட்சியை எடுத்து அதை வெற்றிகரமான தேசிய அமைப்பாக விரிவுபடுத்துவதற்கு அளப்பரிய முயற்சியும், ஆழமான அடித்தளமும், பல ஆண்டுகால உழைப்பும் தேவை.
வலுவான தலைமை இருந்தபோதிலும் திமுக, அதிமுக போன்ற வலுவான மாநிலக் கட்சிகள் கூட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அப்பால் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தப் போராடியுள்ளன என்பதை வரலாறு காட்டுகிறது. சமீபத்தில் பிஆர்எஸ் போன்ற கட்சிகள் தேசிய அளவில் செயல்பட முயன்று படுதோல்வியடைந்தன. அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு விரிவடைவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி போன்ற பல தசாப்த கால அனுபவம் வாய்ந்த அரசியல் ஜாம்பவான்கள் கூட, தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு, மாநில ஆதிக்கத்தைப் பயன்படுத்தி தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும், அவர்கள் அந்த லட்சியத்தை அடையவில்லை.

விஜய் தனது நிர்வாகத் திறனை இன்னும் நிரூபிக்கவில்லை அல்லது மாநில அளவிலான வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால், அவரது அமைச்சர்களின் இந்த அதீத முன்னெடுப்பு ஒரு கட்டத்தில் அவருக்கே பாதகமாக முடியலாம் அல்லது அவருக்கு எதிராகவே திரும்பலாம். தேர்தல் ஆய்வாளர்களின் கருத்துக்கணிப்புகள், ஆய்வுகள் வந்து போகக்கூடியவை. ஆனால், நாட்டின் பெரும்பான்மையினருக்கு ஏற்ற சிறந்த கொள்கை, உறுதியான நிர்வாகத்தின் மூலமே நீண்டகால நம்பகத்தன்மை கட்டமைக்கப்படுகிறது.
விஜய் போன்ற அனுபவமற்ற ஒரு தலைவர், முதலமைச்சராக ஒரே ஒரு பதவிக்காலத்தை மட்டுமே நிறைவு செய்த நிலையில், உடனடியாக தேசிய அரசியலில் குதித்து ஆதிக்கம் செலுத்த நினைப்பது என்பது, ராக்கெட்டையே இன்னும் உருவாக்காத நிலையில் நிலவை அடையவும் நட்சத்திரங்களைப் பிடிக்கவும் முயற்சிப்பதற்குச் சமமாகும்.
