தலைமைச் செயலகத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக முன்னேறிய நிலையில், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. “முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் வந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு இதுவரை காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
“எங்களை அனுமதியுங்கள்… நாங்கள் முதலமைச்சரை சந்திக்க வேண்டும்” என்று முழக்கமிட்டபடி, அவர்கள் தலைமைச் செயலக நுழைவாயிலில் தொடர்ந்து காத்திருக்கின்றனர். “நாங்கள் கண்டிப்பாக உள்ளே செல்வோம்” என்றும் விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி, ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மீதமுள்ள விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவே அவர்கள் தலைமைச் செயலகம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, விவசாயிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், “அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளை விரட்டியடிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்” என்று விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
