https://republictn.com/

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட த.வெ.க 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் செல்வாக்கு இருந்தும், ஆட்சி அமைப்பதற்கான சட்ட விதிமுறைகள், அரசியல் ராஜதந்திரங்களில் அக்கட்சி காட்டி வரும் அனுபவமற்ற போக்கு, “வெற்றி பெற்றும் வீழ்ந்த கதை”யாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் 108 இடங்களைப் பெற்றாலே, ஒரு தனிப்பெரும் கட்சியாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். ஆனால், அந்த நடைமுறையைக்கூட முறையாகச் செய்யாமல் நள்ளிரவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றது மிகப்பெரிய கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து, த.வெ.க நிர்வாகிகள் சிலர் கூறுகையில் ‘ ‘த.வெ.க., துவங்கிய நாளில் இருந்தே, கட்சியை நடத்துவதில் அனுபவம் இல்லாததால், ஏகப்பட்ட தடுமாற்றங்களை சந்தித்து இருக்கிறது. பிரசார கூட்டங்களை நடத்துவதில் முன் அனுபவம் இல்லாததால் கரூரில் பெருந்துயர சம்பவம் நடந்தது. தேர்தல் கமிஷனருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை, உள்ளாட்சி தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. உள்துறை செயலருக்கு பதில், மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதியது என ஏகப்பட்ட குளறுபடிகள் தேர்தலுக்கு முன் நிகழ்ந்தன.

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பின் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வாங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இப்படி தொடக்கத்தில் இருந்தே பல குளறுபடிகள் நடந்ததை கட்சி தலைமை கவனத்தில் கொள்ளாததால் இன்று வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளை பெற்ற கட்சியாக த.வெ.க உள்ளது.

இதை வைத்தே ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். ஆனால், அதை முறையாக செய்யவில்லை. முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு நள்ளிரவில் எடுத்து சென்றனர். அங்குள்ள அதிகாரிகள் இப்படி வரக்கூடாது என்று தெரிவித்ததுடன், ஆட்சி அமைக்க கோருவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினர். அதையும் முறையாக பின்பற்றவில்லை. ஆளுநரை சந்திக்க சென்ற விஜய், பூங்கொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், நினைவுப்பரிசு வழங்கினார்.

ஆளுநரை சந்திக்க செல்லும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை கூட அறிந்து கொள்ளவில்லை. அதேபோல அதிக இடங்களை பெற்றதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோருவதற்குப் பதிலாக, அவசரப்பட்டு காங்கிரஸின் ஆதரவை பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க, உரிமை கோரப்பட்டு விட்டது. இதனால், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அதேபோல, ஆட்சி அமைக்க பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் விஷயத்திலும் கட்சி தலைமை கோட்டை விட்டது. தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்க முடிவெடுத்தால், அதற்கு அனுபவமிக்க நிர்வாகிகள் குழுவை நியமித்திருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர் என அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் இருந்தும், அவர்களின் பேச்சை விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கேட்கவில்லை. வி.சிக – கம்யூ., கட்சிகளிடம், கூட்டணி குறித்து பேச பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் சீனியர்கள் அடங்கிய குழுவை அமைத்திருந்தால் கூட ஏற இறங்கப் பேசி, கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால், ஜான் ஆரோக்கியசாமியோ அரசியல் அனுபவம் இல்லாத தன் நண்பர்கள் குழுவை வைத்து, கூட்டணி கட்சிகளை அணுகி உள்ளார்.

ஏற்கனவே வேறு திட்டத்தில் இருக்கும் விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது எரிச்சலை தந்துவிட்டது. எனவே தான் விஜயை நேரடியாக பேச சொல்லுங்கள் எனக்கூறி, கூட்டணிக்கு வர விரும்பிய கட்சிகளும் அமைதியாகி விட்டன. த.வெ.க இடத்தில், தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ இருந்திருந்தால் இந்நேரம் பதவி ஏற்பு விழாவே நடத்தி இருப்பர். ஆனால், முன் அனுபவம் இல்லாமல் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றும், எதுவுமே செய்யமுடியாமல் த.வெ.க தடுமாறிக் கொண்டு இருக்கிறது” என்கிறார்கள்.

வியூகங்களை மாற்றாவிட்டால், வெற்றி கையில் இருந்தும் அரியணை என்பது கனவாகவே முடிந்துவிடும்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago