‘சட்டத்தின் ஓட்டைகள்’ வழியே தப்புவது ஒரு கலையென்றால், அதில் கைதேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி! இம்முறை அவரை எந்தவொரு ஓட்டையிலும் தப்பவிடக் கூடாது என ஆளுங்கட்சி ‘இஞ்ச் பை இஞ்ச்’ ஸ்கெட்ச் போட்டு வருகிறது. ஆனால், இந்த ஆட்டத்திற்கு நடுவே ஆளுங்கட்சியையே ஆட்டிப்படைக்க தவெக பின்புலத்தில் ஒரு ‘ரகசிய மாஸ்டர் மைண்ட்’ இயங்கிக் கொண்டிருப்பது பலரும் அறியாத அதிரடித் திருப்பம்.
தமிழக அரசியலில் மேகதாது விவகாரம் ஒருபுறம் கொழுந்துவிட்டு எரிய, மறுபுறம் டாஸ்மாக் ஊழல் வழக்குகள் மீண்டும் உச்சக்கட்ட வேகமெடுத்து பரபரப்பைக் கூட்டியுள்ளன.
டாஸ்மாக்கில் நடந்த தொழில்நுட்ப ரீதியிலான முறைகேடுகளை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, இம்முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், முன்னாள் எம்.டி விசாகன் ஐ.ஏ.எஸும் எந்தவொரு சட்ட ஓட்டையிலும் தப்பிவிடக் கூடாது என்பதில் ஆளுங்கட்சி மேலிடம் மிகத் தீவிரமாக உள்ளது.

செந்தில் பாலாஜியின் வியூகம்
ஆளுங்கட்சி இவ்வளவு கவனமாக காய்நகர்த்தினாலும், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் சில முக்கிய முரண்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
டாஸ்மாக் நிர்வாகத்தின் துறை சார்ந்த கொள்கை முடிவுகளுக்கும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் நேரடி உத்தரவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டச் சட்டக் குழு தயாராகி வருகிறது. இந்த நுட்பமான முரண்பாடுகளை மட்டுமே முதன்மை ஆதாரமாகக் கொண்டு, வழக்கம்போல அரசைச் சட்டரீதியாக நிலைகுலையச் செய்ய செந்தில் பாலாஜி தரப்பு முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது.
தவெகவின் அதிரடி
எதிர்க்கட்சிகள் காவிரி-மேகதாது பிரச்சினையைக் கையில் எடுத்து முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுக்க, தவெக டாஸ்மாக் ஊழல் வழக்குகளை வளைத்துப் போட்டு ஆளுங்கட்சியை முடக்கும் வியூகத்தில் இறங்கியுள்ளது.
இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், டாஸ்மாக் நிர்வாகத்தின் அத்தனை மறைமுக முறைகேடுகளையும் விரல் நுனியில் வைத்துள்ள ஒரு ‘மாஸ்டர் மைண்ட்’ தவெகவிலேயே இருக்கிறார்.
யார் இந்த ஐஏஎஸ்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் எம்.டி-யாகப் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர் தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைந்து அமைதியாகப் பயணித்து வருகிறார்.
டாஸ்மாக் துறையின் நுணுக்கமான செயல்பாடுகள் அனைத்தும் அறிந்த இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க நபர் தங்கள் கட்சியிலேயே இருப்பது, விஜய் உட்பட தவெகவின் உயர்மட்டத் தலைமைக்கே தெரியாத ரகசியமாக இருந்துள்ளது.
ஒருபுறம் வழக்குகளில் உள்ள சட்ட முரண்பாடுகள், மறுபுறம் டாஸ்மாக் ரகசியங்களை அறிந்த நிபுணர்களின் வியூகங்கள் என இந்த விவகாரம் தமிழக அரசியலை அடுத்தகட்டப் பரபரப்பிற்கு எடுத்துச் சென்றுள்ளது.
