தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் தனது 47வது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அரச குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரச குடும்பத்தின் அறிக்கையின்படி, இளவரசி பஜ்ரகிதியாபா கடந்த ஜூன் 12, 2026 அன்று பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, இதயத் தொற்றால் ஏற்பட்ட கடுமையான சீரற்ற இதயத் துடிப்பு காரணமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து கோமா நிலைக்குச் சென்ற அவர், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான பஜ்ரகிதியாபா, அந்நாட்டின் அரியணையில் அமரவிருந்த முதல் பெண் வாரிசாக பரவலாகக் கருதப்பட்டார். அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக விளங்கிய அவர், பொது சேவை மற்றும் சட்டத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், தாய்லாந்து அரசு வழக்கறிஞராகவும், ஆஸ்திரியாவிற்கான தாய்லாந்து தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
இளவரசி பஜ்ரகிதியாபாவின் உடல் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸ் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அரச மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
