பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, திரைப்பட படப்பிடிப்பின் போது பாடல் காட்சி ஒன்றிற்காக நடனமாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார் கடுமையாகக் கிழிந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறைந்தது ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் ‘மைசா’ (Mysaa) திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்திற்காக, சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடியில் நடைபெறும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, படத்தின் முக்கியமான பாடல் காட்சிக்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வேகமான நடன அசைவுகளைச் செய்து கொண்டிருந்த ராஷ்மிகா திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவரது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்ட உடனேயே படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு ராஷ்மிகாவை அழைத்துச் சென்றனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார் கடுமையாகக் கிழிந்திருப்பது மட்டுமல்லாமல், அது எலும்புப் பகுதியில் இருந்து பிரிந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த வகையான தசைநார் கிழிசல் பொதுவாக தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கே ஏற்படும் மிகவும் கடுமையான காயமாகும். ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்பட்ட காயமும் அதே அளவிற்கு தீவிரமானது என்பதால், குறைந்தது ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஓய்வுக் காலம் முடிந்த பிறகும் அவர் வழக்கமான பணிகளுக்கு உடனடியாக திரும்ப முடியாது என்றும், நீண்டகால உடற்பயிற்சி சிகிச்சை (Rehabilitation) மற்றும் மருத்துவ கண்காணிப்பு அவசியமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காயம் காரணமாக ராஷ்மிகா மந்தனா தற்போது நடித்து வரும் பல முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘மைசா’ திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகள், மேலும் அவர் நடித்து வரும் ‘ரணபாலி’ (Ranabaali) திரைப்படத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பல்வேறு விளம்பரப் படங்களுக்கான ஒப்பந்தப் பணிகள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்து வரும் பிரம்மாண்ட வரலாற்றுப் பின்னணியிலான ‘ரணபாலி’ திரைப்படம், 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராஷ்மிகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு வார ஓய்வு காரணமாக, படத்தின் மீதமுள்ள பணிகள், விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிக்கட்ட தயாரிப்புகள் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளதால், திரைப்படத்தின் வெளியீட்டு தேதியிலும் மாற்றம் ஏற்படலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பாக இந்திய அளவிலான பல முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், ராஷ்மிகா மந்தனா அல்லது அவரது மேலாளர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா மந்தனா விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக தெலுங்கு திரைப்படத் துறையில் படப்பிடிப்பின்போது பல முன்னணி நடிகர்கள் காயமடைந்த சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பவன் கல்யாண், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் படப்பிடிப்புகளின்போது காயமடைந்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த விபத்து திரையுலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி, ராஷ்மிகா மந்தனா அடுத்த ஆறு வாரங்கள் முழுமையான ஓய்வில் இருந்து, அதன் பின்னர் மருத்துவர்களின் அனுமதியுடன் படிப்படியாக உடற்பயிற்சி சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் தனது திரைப்படப் பணிகளுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
