மும்பையில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி, கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிகரமான மரணங்களுக்குக் காரணம் உணவுக் கலப்படம் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது நச்சுப் பொருட்கள் கண்டறியப்பட்டதால், உணவு நஞ்சூட்டலை விட ஒரு பெரிய காரணம் இருக்கலாம் என்று தெரிகிறது.
இப்போது, இந்த வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தடயவியல் சோதனை அறிக்கைகளின்படி, அவர்கள் நால்வரும் ஒரு கொடிய எலிக்கொல்லியால் இறந்துள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட தர்பூசணியில் எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் இருந்துள்ளது.
ஆரம்பகட்ட தடயவியல் சோதனைகளில், பாதிக்கப்பட்டவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் உள்ளிட்ட சில உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தது தெரியவந்த நிலையில், அவர்களின் உடல்களில் துத்தநாக பாஸ்பேட் (zinc phosphate) இருந்ததை தெளிவுபடுத்தியுள்ளன. அதுவே சில மணி நேரங்களிலேயே அவர்களைக் கொன்றது.
அந்த இரசாயனம் தற்செயலாகப் பழத்தில் கலந்ததா? அல்லது வேண்டுமென்றே செலுத்தப்பட்டதா? என்பதை மருத்துவ நிபுணர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். மரணங்கள் நிகழ்ந்த உடனேயே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தடயவியல் அறிக்கைகள் இந்த மர்மத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதால், விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
தெற்கு மும்பையில் உள்ள இஸ்மாயில் குர்தே சாலையில் உள்ள காரி மொஹல்லாவைச் சேர்ந்த டோகாடியா குடும்பத்தினர், விருந்தினர்கள் விருந்து முடிந்து சென்ற பிறகு, ஏப்ரல் 26 அன்று நள்ளிரவில் பிரியாணி, தர்பூசணி சாப்பிட்ட பின்னர் உயிரிழந்தனர். உணவுப் பொருட்கள், குறிப்பாக பழங்களில், இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 44 வயதான அப்துல் டோகாடியா, அவரது மனைவி 35 வயதான நஸ்ரின் மற்றும் அவர்களது மகள்கள் 16 வயதான ஆயிஷா, 13 வயதான ஜைனப் ஆகியோர் உயிரிழந்தனர்.
