ஆளுங்கட்சியான திமுக-வுடன் இணைந்து அதிமுக புதிய அரசியல் வியூகங்களை அமைக்க முயற்சிப்பதாகச் சில வதந்திகள் பரவின. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உணர்வுப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அதிமுக, திமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி என்பது பொய் செய்தி. அதிமுக எனும் ஆலமரத்தை வெட்டி சாய்க்க முயற்சி. அரசியலில் பல புயல்களை தாண்டியும் தாங்கி நிற்கும் 1000 காலத்து பயிர் அதிமுக. பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம். ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிட வேண்டாம். மக்கள் கொடுத்த அங்கீகாரத்தையும், அடையாளம் தந்த கட்சியை நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன.
அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். அனைவரும் ஒன்று கூடுவோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பிரிந்து கிடக்கும் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது
