1943 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ராமசாமி ஐயாவுக்கும் சின்னத்தாய் அம்மாளுக்கும் பிறந்தவர் இசைஞானி இளையராஜா ஆவார். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன். பின்னாளில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக உயர்ந்த இவர், “இசைஞானி” என மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவர் 2022 முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். ஐந்து தேசிய விருதுகள், பத்ம விபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், சுமார் 8600-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் 380-க்கும் அதிகமான பாடல்களை தன் சொந்தக் குரலில் பாடியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரது இசைக்கும் குரலுக்கும் மயங்காத ரசிகர்கள் இல்லை எனலாம். லண்டனின் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவால் “மாஸ்ட்ரோ” என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு லண்டனில் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்போனியை இசைத்த முதல் இந்திய திரைப்பட இசையமைப்பாளராகவும் இவர் சாதனை படைத்துள்ளார். இசை மட்டுமல்லாது சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆழ்ந்த அறிவு கொண்ட இசை ஞானியாகவும் விளங்குகிறார்.
மேலும், 1986 ஆம் ஆண்டு கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இசை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் இவர் அறியப்படுகிறார்.
இவரது இசைப் பயணத்தின் தொடக்கமாக 1976 ஆம் ஆண்டு மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படம் அமைந்தது. தேவராஜ்–மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதன் பின்னர் இவரது இசை, வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆழமான கலைவடிவமாக மாறியது. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் இவரது இசைக்காக காத்திருக்கும் நிலை உருவானது.
இன்று, தனது இசைப் பயணத்தின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், இளையராஜா இந்திய இசை உலகின் மாற்றமற்ற ஜாம்பவானாக திகழ்கிறார். அவரது இசை தலைமுறைகளைத் தாண்டியும் நிலைத்து நிற்கும் அழியாத இசைச் சுவடாக விளங்குகிறது.
