https://republictn.com/

ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகிறது. தேயிலையின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய பங்களிப்பு.

சீனாவில் தோற்றம் பெற்றதாக அறியப்படும் தேயிலை, பல நாடுகளில் கலாச்சார பாரம்பரியம், சமூக வழக்கங்கள் மற்றும் விருந்தோம்பலின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பானமாக தேநீர் விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் நாளை தேநீருடன் தொடங்குகின்றனர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேயிலை முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆண்டிற்கு சுமார் 7.3 மில்லியன் டன் தேயிலை உற்பத்தி நடைபெறுகிறது.

இதன் மூலம் சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும், சுமார் 7,900 கோடி ரூபாய் அளவிலான தேயிலை வர்த்தகமும் நடைபெறுவதாக ஐநா அமைப்பு தெரிவிக்கிறது.

சிறு நில தோட்டக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்தத் துறையை முழுமையாக நம்பி வாழ்கின்றனர். பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு தேயிலை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் முக்கிய பங்காற்றுகிறது. இதில் பெண்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர்.

உலகளவில் தேயிலை வளர்ப்பு பெரிய பொருளாதார சந்தையாக மாறியிருந்தாலும், தமிழர்கள் உட்பட பல இன மற்றும் மொழி குழுக்களை சேர்ந்த மக்கள், தேயிலை தோட்டங்களில் பல்வேறு சுரண்டல்கள் மற்றும் அடக்குமுறைகளை சந்தித்த வரலாற்றுச் சுவடுகளும் உள்ளன.

தற்போது தேயிலை நுகர்வு உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் தேயிலை நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளராகவும், அதிகமாக நுகர்வோராகவும் இந்தியா விளங்குகிறது. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை, இன்று இந்தியாவின் முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றாக உள்ளது.

அசாம், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, குன்னூர், மாஞ்சோலை உள்ளிட்ட பல மலைப்பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பரவலாக உள்ளன.

தேயிலை தொழிலாளர்களின் நலன் மற்றும் நிலையான தேயிலை சாகுபடியை வலியுறுத்தும் நோக்கில், 2005ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. பின்னர் 2005 முதல் 2015 வரை அது கடைபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அங்கீகாரத்துடன் மே 21ஆம் தேதி சர்வதேச தேயிலை தினமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தேயிலை தொழில்துறையின் பங்களிப்பை உயர்த்தி, நிலையான மற்றும் நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதும், இந்தத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago