தேர்தலுக்கு முன்பிருந்தே செந்தில் பாலாஜி மீது ஸ்பெஷல் கவனம் செலுத்தி வரும் விஜய், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர் வழக்குகள் மூலம் அவரை விரட்டி வருகிறார்.
அதற்கேற்ப, முதல்வர் விஜய் கொடுத்த டாஸ்மாக் டாஸ்க்கை நிறைவேற்றும் வகையில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அபிடவிட்டை ஆதாரமாக வைத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூலை 28ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
இந்த எஃப்ஐஆரில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 857 பார்களுக்கு ஒப்பந்தங்கள் கூறப்பட்டன. இதில் ஒரே வங்கியில் தொடர்ச்சியான வரிசை எண்களுடன் டிமாண்ட் டிராப்ட்கள் எடுத்து கூட்டு சதி நடந்துள்ளதற்கான எவிடென்ஸ் மிக முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ₹32.80 கோடி முறைகேடு நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு, டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தங்களில் முறைகேடு, பார் ஒதுக்கீட்டில் முறைகேடு, மதுபான ஆலைகளுடன் இணைந்து போலி நிதிப் பரிவர்த்தனை எனக் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கின்றன.
மேலும், எஃப்ஐஆரில் ஏழாவது பெயராக சேர்க்கப்பட்டுள்ள மூலனூர் சக்தி மிஸ் கார்த்திக் தலைமையில் கரூர் கம்பெனி செயல்பட்டதாகவும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் பரிந்துரைத்தவர்களுக்கே பார் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது. பார் உரிமையாளர்களை மிரட்டி பார்ட்டிபன் வாங்கிய குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குதிரைப் பேர வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த கார்த்திக், தற்போது டாஸ்மாக் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். கார்த்திக்கை அப்ரூவராக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ள நிலையில், அவர் வாய் திறந்தால் செந்தில் பாலாஜியின் ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் சரியும் என விரிவாகச் சொல்லி முடித்தார்.
செந்தில் பாலாஜியைத் துரத்தும் வழக்குகள் தொடர்பாக தவெக தேசிய செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான மா. சத்தியகுமார் கூறியதாவது: “டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கவில்லை. அவரைக் கைது செய்யத் தடை விதித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை எப்போது அழைத்தாலும் விசாரணைக்குச் செல்ல வேண்டும். ஒத்துழைக்காவிட்டால் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற்று அவர் கைது செய்யப்படுவார்.
அதோடு, குதிரைப் பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி காலை, மாலை ஆஜராக வேண்டும்.
மின்துறை அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர் கொள்முதல் தொடர்பாக செந்தில் பாலாஜி மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது. இன்கம் டாக்ஸ் ரெய்டு வழக்கும், ரெய்டுக்கு வந்த அதிகாரிகளைத் தாக்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது. கரூர் நெருசல் வழக்கிலும் சிபிஐ அவரை விசாரித்துள்ளது” என்றார்.
முன்னாள் அமைச்சர் நேருவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறும்போது, “நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் ₹634 கோடி வரை லஞ்சம் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியதுடன், 232 பக்க அறிக்கையை தமிழக டிஜிபிக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இக்கடிதம் வந்த நிலையில், அப்போதைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை அடுத்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கடந்த பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் திமுக ஆட்சி என்பதால் காவல்துறை தரப்பில் நோ ஆக்ஷன். இதை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்பதுரை தாக்கல் செய்தார். அதேபோல், தன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என நேரு தரப்பிலும், திமுக அரசு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; காட்சிகளும் மாறின.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நேரு, அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த ஜூன் 5ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ள து.
இதனால் அதிர்ந்து போன நேரு தரப்பு, ‘எங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் முத்திரையிட்டுள்ளது’ என்று வாதிட, குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்தைக் கேட்டுவிட்டு எஃப்ஐஆர் போட வேண்டும் எனக் கூற அடிப்படை உரிமை இல்லை என அரசு தரப்பு பதிலடி கொடுத்தது. வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” என்றார்.
“ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணையில், நேரு உள்ளிட்டவர்கள் மீது எஃப்ஐஆர் போடப்பட்டது சரிதான் என நீதிமன்றம் உத்தரவிடுமானால், அடுத்த கட்ட விசாரணைக்கு நேரு ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. மற்றொரு புறம், எஃப்ஐஆர் பதிவானதைக் காரணம் காட்டி, ஏற்கனவே கைப்பற்றிய ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கும். நேருவுக்கு சம்மன் அனுப்பவும், விசாரிக்கவும், கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுக எம்பி இன்பதுரை ஊடகம் ஒன்றிற்கு அளித்த தகவலில், “ஈடி கொடுத்த தகவலின் அடிப்படையில் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன். தற்போதைய அரசு வழக்குப் பதிவு செய்துவிட்டது.
இந்த வழக்கில் தீவிரம் காட்டுவது போலவே, அதிமுக எம்எல்ஏக்களின் குதிரைப் பேர புகார், பழனி கோவில் நில அபகரிப்பு புகார் ஆகியவற்றிலும் தவெக அரசு தீவிரம் காட்ட வேண்டும்” என்றார்.
இதற்கிடையே, நேரு வழக்கில் போடப்பட்டுள்ள எஃப்ஐஆரில் இணைத்தரகர் என்ற பெயரிலும், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆறாவது பெயராகவும் ரத்தீஷ்ராஜ் சண்முகவேல் பெயர் இடம்பெற்றுள்ளது.
ரத்தீஷின் உத்தரவின் பெயரில்தான் டாஸ்மாக் நிர்வாகம் எந்தெந்த ஆலைகளிலிருந்து சரக்கு வாங்க வேண்டும் என்பது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பார் டெண்டர்கள், அதிகாரிகள் இடமாற்றம் போன்றவற்றிலும் ரத்தீஷின் தலையீடு இருந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. மேலும், திமுக ஆட்சியில் ரத்தீஷின் தந்தை பெயரில் தொடங்கப்பட்ட ஷெல் கம்பெனிகள் மற்றும் கோலிவுட்டில் ரத்தீஷ் செய்த முதலீடுகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டாக உள்ளது.
இப்படியாக, ரத்தீஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது அமலாக்கத்துறை என இரு விசாரணை அமைப்புகளும் கண் வைத்துள்ள நிலையில், விசாரணை வளையத்திற்குள் ரத்தீஷ் கொண்டு வரப்பட்டு, அவர் வாய் திறந்தால் உதயநிதிக்கும் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.
திமுகவுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடிகள் என்ற நிலை உருவாகியுள்ளதால் அண்ணா அறிவாலயமே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாம்.
