மாநில அளவில் திமுக- காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சியை “துரோகி கட்சி” என்று திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருஜ்கின்றனர். ஆனால், இந்த அரசியல் சூறாவளிக்கு மத்தியிலும், கும்பகோணம் மாநகராட்சியில் மட்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணி எதற்கும் பணியாமல் மிகவும் வலுவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாநில அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தாலும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தான் மேயராகப் பதவி வகித்து வருகிறார். கும்பகோணம் மாநகராட்சியின் மொத்தமுள்ள 48 கவுன்சிலர்களில் 31 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். இத்தகைய பெரும்பான்மை பலம் திமுகவிடம் இருந்தபோதிலும், மேயர் சரவணன் திமுகவிற்கு முற்றிலும் விசுவாசமாகச் செயல்பட்டு வருவதால் இக்கூட்டணி அங்கே உடையாமல் நீடிக்கிறது.
மாநகராட்சியில் திமுகவின் கை ஓங்கியிருப்பதால், மேயர் சரவணன் திமுக தலைமையின் விருப்பங்களுக்கு இணங்கவே செயல்படுகிறார். குறிப்பாக, மாநகராட்சி அலுவலகத்தில் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை மாற்றுவதற்கு அனுமதி மறுப்பது முதற்கொண்டு, திமுகவினர் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே மேயர் சரவணன் செய்து வருகிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்குப் புகார்கள் அனுப்பப்பட்ட போதிலும், டெல்லி தலைமையோ அல்லது மாநில தலைமையோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. “உங்களுடைய மாநில, தேசிய அரசியலுக்காக நீங்கள் கூட்டணியை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். ஆனால், என்னை மேயர் நாற்காலியில் உட்கார வைத்த திமுகவிற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது” என்ற தொனியில் மேயர் சரவணன் தனது சொந்தக் கட்சியின் தலைமைக்கே தற்பொழுது பாடம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளோ அல்லது மாநிலத் தலைமையின் அதிருப்தியோ கும்பகோணத்தின் உள்ளூர் கூட்டணிக் கட்டமைப்பை அசைக்க முடியவில்லை. மாநில அளவில் திமுக – காங்கிரஸ் உறவு கசந்து கிடந்தாலும், கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் சரவணனின் விசுவாசத்தால் இக்கூட்டணி இன்னமும் ‘படு ஸ்ட்ராங்காக’ நீடித்து வருவது தமிழக அரசியலில் ஒரு சுவாரசியமான முரணாகப் பார்க்கப்படுகிறது.
