தமிழக அமைச்சர்கள் சிலர் ஒப்பந்ததாரர்களிடம் 2 முதல் 4 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் “வீ தி லீடர்ஸ்” (We The Leaders) அமைப்பின் தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் “வீ தி லீடர்ஸ்” அமைப்பு சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசினார். அப்போது, தமிழகத்தில் ஊழல் குறையவில்லை என்றும், மீண்டும் ஊழல் தொடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் விஜய் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக இருப்பது உண்மை என்றும், அதனை தாம் வரவேற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். அதேநேரத்தில், அரசின் தொடக்க காலத்திலேயே சில அமைச்சர்கள் பெரிய அளவிலான டெண்டர்களில் கமிஷன் வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர்கள் சிலர் 2 முதல் 4 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
“ஊழல் நின்றுவிட்டது என்கிறார்கள். ஆனால், மீண்டும் தொடங்கியிருக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். முதலமைச்சர் விஜய் அவர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பது உண்மைதான். அதையும் நாம் பார்க்கிறோம்.
பெரிய, பெரிய டெண்டர்களில் சில அமைச்சர்கள் இப்போதுதான் கமிஷன் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள், ‘நாங்கள் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வந்துவிட்டோம்’ என்கிறார்கள். சில அமைச்சர்களின் பேச்சு அடங்கிய ஆடியோ என்னிடம் உள்ளது.
‘தம்பி, நாங்கள் எல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுத்து வந்தோம். ஒரு 2 சதவீதம் கொடு; 3 சதவீதம் கொடு; 4 சதவீதம் கொடு’ என்று சில அமைச்சர்கள் கேட்கிறார்கள்” என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “ஒரு வருடம் கழித்து பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முன்பாகவே, இப்போதே இந்த விஷயத்தில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் விஜய் தனது முதல் சுதந்திர தின உரையில், தனது வாழ்நாளுக்குள் ஊழலை ஒழிப்பதே இலக்கு எனக் கூறியிருந்ததை அண்ணாமலை சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக நேர்மையாக செயல்பட விரும்பினாலும், அவருக்குத் தெரியாமல் சில அமைச்சர்கள் கமிஷன் வாங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு “கடிவாளம் போட வேண்டும்” என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். வார இறுதி நாட்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், முதலமைச்சர் சென்னையில் உள்ள இல்லம் அல்லது பனையூர், கோபாலபுரம், டெல்லி போன்ற இடங்களில் இருந்து மட்டுமே முக்கிய முடிவுகளை எடுக்காமல், ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்று ஆரம்பகட்ட காலத்தில் இருப்பதால், தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை இப்போதே வெளியிட்டு பெரிய பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்து அமைச்சர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், தங்களது “வீ தி லீடர்ஸ்” அமைப்பு இந்த விவகாரத்தை அதிகாரப்பூர்வமாகக் கையில் எடுத்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட எந்த அமைச்சர்கள் கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது என்பதை அண்ணாமலை தனது பேச்சில் பெயரிட்டு தெரிவிக்கவில்லை. அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆடியோ ஆதாரங்களும் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
