ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் நாகரம்பாளெம் பகுதியில், பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக ஆளும் தெலுங்கு தேசம் (TDP) கட்சியின் பிரமுகர் மல்லேலா வெங்கட ரமண மூர்த்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.
போலீசார் தெரிவித்ததன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ரமண மூர்த்தி தரப்பினரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். மாநகராட்சியின் வடிகால் விரிவாக்கப் பணிகளின்போது அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணறு சேதமடைந்ததாகவும், அதை மீண்டும் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்துள்ள புகாரில், ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பாக ரூ.10,000 லஞ்சம் கோரப்பட்டதாகவும், அதனை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரமண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, நாகேஸ்வர ராவ் என்பவரின் மனைவியை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து, அவரது ஆடையைக் கிழித்து பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு, முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் மல்லேலா வெங்கட ரமண மூர்த்தி உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இரவு நேரத்தில் வீட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் நோக்கில் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், பெண்ணின் கற்பை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள் அல்லது செயல்கள், ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் ந. சந்திரபாபு நாயுடு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ரமண மூர்த்தி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷும் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் ஜூலை 15-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறி நகராம்பாளெம் காவல் ஆய்வாளர் ஒய். சத்தியநாராயணாவை குண்டூர் ரேஞ்ச் ஐஜி பணியிட மாற்றம் செய்து, துறை ரீதியான கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.
மேலும், தாக்குதல் சம்பவத்தின் போது சில திருநங்கைகளும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டும் போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளித்தபோது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்கியதாகவும், உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிக்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால் வழக்கை மூடி மறைக்க முயற்சி நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரடியாக தலையிட்டு, குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்சி நிர்வாகியின் பொறுப்புகள் உடனடியாகப் பறிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூர் எம்.எல்.ஏ. கல்லா மாதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, சம்பவம் நடைபெற்ற பிறகும் மூன்று நாட்கள் வரை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகே அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவர் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற விசாரணையின் முடிவின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை இறுதியாகத் தீர்மானிக்கப்படும்.
