நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விழா, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் என தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் 25-ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகச் சிறப்பாகவும், வரலாறு பேசும் வகையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிகர் மட்டுமல்ல; தமிழ் திரையுலகின் பிதாமகன். தாம் பேசிய முதல் வசனத்தையே தனது வாழ்க்கைக் கொள்கையாக மாற்றிக் கொண்ட மாபெரும் கலைஞர். கர்மவீரர் காமராஜரின் பக்தராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பராகவும், கலைத்தாயின் செல்லப் புதல்வராகவும் திகழ்ந்தவர்.”
மேலும் அவர் கூறுகையில், “பாரதியாரை நாம் நேரில் பார்த்ததில்லை; ஆனால் அவரை சிவாஜி கணேசன் மூலம் பார்த்தோம். கப்பலோட்டிய தமிழனை நேரில் பார்த்ததில்லை; ஆனால் அந்த வரலாற்று நாயகனை நமக்கு உயிர்ப்பித்து காட்டியவர் சிவாஜி கணேசன். அதுபோல, மகாபாரதத்தின் கர்ணனை நம் கண்முன் உயிருடன் வாழ வைத்ததும் அவர்தான்.” என்றார்.

குறிப்பாக, ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” என்ற காட்சியை நினைவுகூர்ந்த அமைச்சர், “அந்த தேர்சக்கரத்தில் சிக்கிய நிலையிலும் தன்னுடைய கொடை மனப்பான்மையை வெளிப்படுத்தும் கர்ணனின் காட்சி ஒவ்வொரு முறையும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக நம் கண்முன் கொண்டு வந்தவர் சிவாஜி கணேசன். இந்த உலகிற்கு சூரியன் ஒன்று, சந்திரன் ஒன்று; நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவரே ஒருவர். அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று புகழாரம் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து, “சிவாஜி கணேசனின் நூற்றாண்டு என்பது தமிழ்நாடு பெருமையுடன் கொண்டாட வேண்டிய வரலாற்று நிகழ்வு. அவரது உழைப்பு, திறமை மற்றும் கலைப்பங்களிப்பை உலகமே வியக்கும் வகையில், சரித்திரமே பேசும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான விழாவாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அரசு நடத்தும். இது எங்களுடைய பெருமை அல்ல; அவருக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனும் கடமையும் ஆகும்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதனிடையே, நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, இந்த அறிவிப்பை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், “நூற்றாண்டு விழாவைத் தாமே முன்னின்று தலைமை ஏற்று நடத்தப் போவதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் என்னிடம் உறுதியளித்துள்ளார். எங்கள் குடும்பத்திற்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது” என்றார்.
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத இடத்தைப் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்ற அறிவிப்பு, திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
