சென்னை செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் அமையவிருந்த மெகா விளையாட்டு நகரத் திட்டத்திற்கான பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவில் சுமார் ₹206 கோடி மதிப்பில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆர்பிபி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), அந்த பணி ஆணையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து, ஆர்பிபி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், விளையாட்டு நகரத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதற்காக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் அளவுக்கு, திட்டத்தை இன்னும் பிரம்மாண்டமாக மறுவடிவமைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே தற்போதைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்த விதிகளில் இடம்பெற்றுள்ள Force Majeure பிரிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி ஆணை ரத்து செய்யப்பட்டபோது, ஆர்பிபி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே முதற்கட்டப் பணிகளைத் தொடங்கி கணிசமான தொகையைச் செலவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு மற்றும் சட்டரீதியான தீர்வுகள் குறித்து நிறுவனம் ஆலோசித்து வருகிறது. பங்குச்சந்தைகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, அதிகாரிகளுடன் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளே காரணம் எனவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முதற்கட்டமாக 80-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த விளையாட்டு நகரத்தில், சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம், 10, 25 மற்றும் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் தளங்கள், வில்வித்தை மற்றும் ஸ்கேட்டிங் மைதானங்கள், படகோட்டம் மற்றும் கயாக்கிங் உள்ளிட்ட நீர்விளையாட்டு உள்கட்டமைப்புகள், வீரர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தன.

இந்த விளையாட்டு நகரத்திற்காக வண்டலூர், குத்தம்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில் செம்மஞ்சேரி தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், செம்மஞ்சேரி பகுதி மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக இருப்பதால், அங்கு முறையான மழைநீர் வடிகால் திட்டத்தைத் தயாரிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (CMDA) முந்தைய தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார்.
இதனிடையே, SDAT கடந்த ஜூன் மாதமே இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாகக் கூட்டங்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மாநில அல்லது தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவதைக் கடந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிரம்மாண்டமான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் வகையில், அதிகளவிலான உள்கட்டமைப்புடன் திட்டத்தை மறுசீரமைத்து மறுவடிவமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 112 ஏக்கர் நிலமும் அரசியல் மற்றும் உள்கட்டமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. முன்னாள் கல்வியாளர் ஜெப்பியார் கல்வி அறக்கட்டளையின் வசம் நீண்ட காலமாக இருந்ததாகக் கூறப்பட்ட இந்த அரசு நிலம், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டதாகவும், ₹2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அந்த நிலம் விளையாட்டு நகரத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பணி ஆணை ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனமான ஆர்பிபி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்தன. சுமார் ₹282 கோடி சந்தை மூலதனம் கொண்டதாகக் கூறப்படும் அந்த நிறுவனத்திற்கு, ₹205.89 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது வருவாய் வாய்ப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், செம்மஞ்சேரி பகுதி வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக நீர்வளத் துறை சார்பில் ₹52.17 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு உள்கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தமும் இதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது விளையாட்டு நகரத் திட்டத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வெள்ளத் தடுப்புப் பணிகளின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பதவியேற்ற பிறகு, முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் நில முறைகேடு புகார்கள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செம்மஞ்சேரி மெகா விளையாட்டு நகரத் திட்டத்தின் பணி ஆணையும் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், செம்மஞ்சேரியிலேயே இந்தத் திட்டம் பிரம்மாண்டமாக மறுவடிவமைக்கப்படுமா அல்லது மாற்று இடத்தில் புதிய விளையாட்டு நகரம் அமைக்கப்படுமா என்பது குறித்து வெளியாகவுள்ள புதிய அரசாணைக்காக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
