சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்களில் சிலவற்றை பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மைதா மாவுடன் சேர்த்து வேகவைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் ஒடிசாவைச் சேர்ந்த இளம் தம்பதியான மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீடு நீண்ட நாட்களாகப் பூட்டிக் கிடந்துள்ளது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது வீடு முழுவதும் ரத்தக் கறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் இருந்த பெரிய பிரியாணி அண்டாவில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் பாகங்களுடன் காய்கறிகள் மற்றும் மைதா மாவும் சேர்த்து வேகவைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். துர்நாற்றம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அண்டாவை மூடி, அதன் ஓரங்களில் மைதா மாவைத் தடவி சீல் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டில் ஹைதுல் நிஷா என்ற பெண்ணும், ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோரும் வாடகைக்கு தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்டாவில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஹைதுல் நிஷாவுடையதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது தலை இதுவரை கிடைக்காத நிலையில், அதனைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மற்றொரு முக்கியத் திருப்பமாக உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. அந்த சூட்கேஸில் இருந்த உடல் பாகங்களும், கூடுவாஞ்சேரி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களும் ஒரே பெண்ணுடையதா என்பதை உறுதி செய்ய, சென்னை போலீசார் ஆக்ரா ரயில்வே போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், பெண்ணைக் கொலை செய்த பின்னர் அவரது உடலின் சில பாகங்களை ஒரு சூட்கேஸில் அடைத்து, சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலில் அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீதமிருந்த உடல் பாகங்களைத்தான் கூடுவாஞ்சேரி வீட்டில் இருந்த பிரியாணி அண்டாவில் மறைத்து வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதனிடையே, கொலைக்குப் பிறகு தலைமறைவான மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் பகமதி மாஜி ஆகியோரைப் பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்தனர். அவர்கள் ஒடிசா அல்லது பீகாருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
அவர்களின் செல்போன் சிக்னலை துல்லியமாகக் கண்காணித்ததுடன், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் அவர்களின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்தனர். அதன் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலைக்கான காரணம் என்ன, கொலை எவ்வாறு திட்டமிடப்பட்டது, உடல் பாகங்களை ஏன் ரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பினர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விசாரணைக்குப் பிறகே முழுமையான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலீசார் வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த இளம் தம்பதியினருடன் ஹைதுல் நிஷாவும் அந்த வீட்டில் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது. மூவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹைதுல் நிஷாவுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது. அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நிஷாவின் 19 வயது மகன் சென்னை தாம்பரம் பகுதியில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். மகனின் வேலை காரணமாகவே நிஷா சென்னைக்கு வந்து, ஒடிசாவைச் சேர்ந்த இந்த இளம் தம்பதியினருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி இருவரும் இளம் வயதுடையவர்கள். குறுகலான சிறிய தெருவில் அமைந்துள்ள வாடகை வீட்டில் இத்தகைய கொடூரமான சம்பவத்தைத் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீட்டின் உரிமையாளரும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ளார். பார்ப்பதற்கு அமைதியாகத் தெரிந்த இளம் தம்பதியினருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த நிலையில், அவர்கள் மீது இத்தகைய கொடூரமான குற்றச்சாட்டு எழுந்திருப்பது தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கொலை செய்த பின்னர் உடலின் சில பாகங்களை சூட்கேஸில் வைத்து ரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியதுடன், மீதமுள்ள உடல் பாகங்களை வீட்டிலேயே மறைத்து வைக்க முயன்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். செல்போன் சிக்னல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.
மீட்கப்பட்ட உடல் பாகங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு மற்றும் அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ மற்றும் தடயவியல் ஆய்வுகளின் முடிவுகளுக்குப் பிறகே, மீட்கப்பட்ட உடல் பாகங்கள் ஹைதுல் நிஷாவுடையதா என்பது உறுதி செய்யப்படும்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் பகமதி மாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலைக்கான உண்மையான காரணம், உடலைத் துண்டு துண்டாக வெட்டியதற்கான காரணம், பிரியாணி அண்டாவில் உடல் பாகங்களை வேகவைத்ததன் பின்னணி மற்றும் ஆக்ராவுக்கு உடல் பாகங்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம் உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையின் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
