காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயம் எனும் சங்கரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில்
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த நிகிதா (19) என்ற மாணவியும் தங்கி இசிஇ பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கும் வரவில்லை. விடுதி அறையில் இருந்து வெளியில் வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைடுத்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும் மற்றும் பொன்னேரிகரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி தங்கியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி நிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து நிகிதாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது அறையை தீவிர சோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் தான் ஆசையாக காதலித்த காதலன் கடந்த சில நாட்களாக பேசாததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார். மாணவி நிகிதா உயிரிழந்த சம்பவத்தை அறிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவ மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நிகிதா எழுதிய கடிதம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
