தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நிவேதா தாமஸ். மை டியர் பூதம் உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், பின்னர் பாபநாசம், ஜில்லா, தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து முற்றிலும் புதிய ஸ்லிம் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக நிவேதா தாமஸின் உடல் எடை அதிகரித்திருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் சிலர் அவரை விமர்சித்ததுடன், பாடி ஷேமிங் செய்தும் வந்தனர். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு அவர் எந்தவிதமான பதிலடியும் கொடுக்காமல், தனது சினிமா பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையைக் குறைத்து, முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிவேதா தாமஸ் தனது உடல் எடையை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் 2024-ஆம் ஆண்டு வெளியான ‘35 சின்ன கதா காடு’ திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நடுத்தரக் குடும்பத்து இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை அவர் அதிகரித்திருந்தார். கதாபாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் இயல்பான ஒன்று என்றும், திறமைக்கும் உடல் எடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நிவேதா முன்பு கூறியிருந்தார்.

உடல் எடை அதிகரித்திருந்த காலத்தில், இனி கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்துவிடுமா எனவும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிவேதா தாமஸ் மிகவும் முதிர்ச்சியுடன் பதிலளித்திருந்தார். ஒரு கதாபாத்திரத்திற்காக உடல் தோற்றத்தை மாற்றுவது நடிகர்களின் பணியின் ஒரு பகுதி என்றும், தனது திறமையை உடல் எடையை வைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதனிடையே, படப்பிடிப்புகள் முடிந்த பிறகு தனது உடல் ஆரோக்கியத்தில் நிவேதா தாமஸ் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். முறையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்றி குறுகிய காலத்திலேயே தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளார்.
அவரது இந்த மாற்றம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களில் அவர் இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிவேதாவின் உடல் எடை குறைப்புக்கு திரைப்பட வாய்ப்புகள் மட்டுமே காரணம் அல்ல. அவரது உடல்நலமும் முக்கிய காரணமாக இருந்துள்ளது. கடந்த காலங்களில் படப்பிடிப்புகளின்போது ஏற்பட்ட விபத்துகளால் அவருக்கு மூன்று முறை முழங்கால் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லிகமெண்ட் கிழிவு, கார்டிலேஜ் பாதிப்பு மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளையும் அவர் சந்தித்துள்ளார்.
உடல் எடை அதிகரித்திருந்த காலத்தில், வீட்டில் உள்ள படிக்கட்டுகளில் ஏறுவதற்குக்கூட சிரமம் ஏற்பட்டதாகவும், மூச்சுத்திணறல் மற்றும் முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளை சந்தித்ததாகவும் நிவேதா தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இதன் விளைவாக தற்போது அவர் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
ஒருபுறம் உடல் எடை தொடர்பான விமர்சனங்களை நிவேதா சந்தித்தாலும், மறுபுறம் தனது நடிப்புத் திறமைக்காக தொடர்ந்து பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களைத் தாண்டி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதற்கிடையே, நிவேதா தாமஸின் புகைப்படங்கள் சிலவற்றை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாக சித்தரித்து இணையத்தில் பரப்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், இது தனது தனியுரிமையை மீறும் செயல் என்றும், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
எதிர்மறை விமர்சனங்கள், பாடி ஷேமிங் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும், அவற்றை பெரிதுபடுத்தாமல் தனது ஆரோக்கியத்திலும் சினிமா பணியிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார் நிவேதா தாமஸ். தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய ஸ்லிம் லுக் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
