சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியதில் இருந்தே திமுகவும், தவெகவும் ஒருவர் மீது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தவெகவினர் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளின் போதும் “ஆதாரம் இருக்கா… ஆதாரம் இருக்கா” என திமுக தொடர்ந்து சட்டப்பேரவையில் கேட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஆதாரம் காட்டவில்லை. அவர் சொல்கிறார், அமைச்சர் பெருமக்கள் எடுத்துப் பேசுகிறபோதே தவறு நடந்திருக்கலாம் என்று அவரே சொல்கிறார். முதலில், தவறு நடந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டதற்கு ஒரு பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, ஆதாரங்களை நாங்கள் காட்டும்போதே இப்படி பேசுகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் ஆதாரங்களை வைத்திருக்கிறார். அவர் ஒருவேளை எடுத்து காட்டிவிட்டார் என்று சொன்னால், அவர்களுடைய நிலைமையை நினைத்துப் பார்த்தேன். கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சி.எம்.விஜய், நான் அதைச் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். “ஆதாரம், ஆதாரம்” என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு மாண்புமிகு நிதி அமைச்சர் பேசும்போது, மூன்று துறைகளில் இருந்து ஆய்வு செய்து, அந்தக் கோப்புகள் எல்லாம் என் மேஜையில் இருக்கின்றன என்று சொன்னார். அவர் ஏதோ போகிற போக்கில் அதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் இருக்கின்றன. அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கின்றன. திறந்து வைக்கச் சொல்லாதீர்கள். எதை, எப்போது திறக்க வேண்டுமோ, அப்போது சரியாக எல்லாமே திறக்கப்படும் என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், நம்முடைய மதிப்பிற்குரிய அண்ணன்கள் எல்லாருமே “பேசுங்கள், பேசுங்கள்” என்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் பேச ஆரம்பித்தால், ஆதாரத்தை காட்ட ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும் என்றார்.
மீண்டும் உரையாற்றிய சி.எம்.விஜய், மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எல்லாவற்றையும் பேசிவிட்டுத்தான் அன்பாகவும் ஆசையாகவும் எங்கள் எல்லோரையும் அழைத்து வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். நான் பேசுவேன். பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா? என்றார்.
