முதலமைச்சர் விஜயின் அலுவலகம் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்படுவதற்கான காரணம் என்னவென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது: தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கலைஞர் நினைத்தார். அதில் ஏதாவது உடன்பாடு இல்லாமல் இருக்கிறதா? மாண்புமிகு அம்மா அவர்களும் ஒரு புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். அதிலும் எங்களுக்கு உடன்பாடு இருக்கிறது.
ஆனால், எந்தக் காலச் சூழ்நிலையில் அவர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று நினைத்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அரசு அலுவலர்களாக இருந்தாலும் சரி, முதலமைச்சர் காலை 9.30 மணி முதல் மாலை வரை சந்திக்கும் பல்வேறு தரப்பினராக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, அனைவரும் வந்து சந்திக்கும் இடமாக தலைமைச் செயலகம் உள்ளது.
நம்முடைய விசிட்டர்ஸ் ரூமைப் பார்த்தாலே தெரியும். வெளிநாட்டிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளோ அல்லது பிற வெளிநாட்டு அதிகாரிகளோ வரும்போது அவர்கள் அமரக்கூடிய இடம் கூட இன்னும் முறையாக மேம்படுத்தப்படவில்லை.
இதற்காகத்தான் கலைஞரும், அம்மா அவர்களும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இப்போது முதலமைச்சருடைய பணிச்சுமை மற்றும் புதிய திட்டங்களை உருவாக்கும் பணிகளைப் பார்க்கும்போது, அவரைச் சுற்றி கிட்டத்தட்ட 200 பேர் பணியாற்றுகின்றனர். புதிய பார்வை மற்றும் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் அலுவலகத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
முதலமைச்சர் மட்டும் நல்ல அறையில் அமர்ந்தால் போதாது. அவரைச் சுற்றி பணியாற்றும் அதிகாரிகளுக்கும் போதுமான வசதிகள் இருக்க வேண்டும்.
நீங்கள் இப்போது உள்ளே வந்து பார்த்தாலே தெரியும். எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4 என முதலமைச்சருடன் பணியாற்றும் அதிகாரிகள் 100 சதுர அடி கூட இல்லாத அறைகளில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சருடைய பரந்த உள்ளத்துடன், அனைத்து அதிகாரிகளுக்கும் நல்ல வசதியான பணியிடங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த அலுவலக மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. அவரைச் சுற்றி கிட்டத்தட்ட 80 பேர் அமர்ந்து பணியாற்றும்போது, அங்கு சரியான கழிப்பறை வசதிகூட இல்லை. நீங்கள் இப்போதுகூட சென்று பார்க்கலாம்.
எனவே, தற்காலிக ஏற்பாடாகத்தான் இந்த அலுவலகம் மாற்றப்படுகிறது. மற்ற உறுப்பினர்கள் கூறுவதைப் போல, இது முதலமைச்சருடைய தனிப்பட்ட வசதிக்காகவோ அல்லது அவருடைய தேவைக்காகவோ மேற்கொள்ளப்படவில்லை.
நாங்கள் இன்னமும் சொல்கிறோம். நாங்கள் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும்போது ஒரு சாதாரண ஹோட்டலில் தங்கியோ, சில நேரங்களில் வண்டியிலேயே படுத்து, சாப்பிட்டு, அங்கேயே இரண்டு மணி நேரம் இருந்துவிட்டு செல்லக்கூடிய எளிமையான முதலமைச்சர் எங்களுடைய முதலமைச்சர்.
எனவே, தவறான தகவல்களை அவையில் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்ற அனைத்து கேள்விகளுக்கும் என்னுடைய பதிலுரையில் விளக்கம் அளிக்கிறேன்.
