”விஜயின் செயல்பாடுகள் இயல்பே பாஜகவிற்கு எரிச்சலை தருகிறது என்ற உண்மையை நன்குணர்ந்த நிலையில், படு எச்சரிக்கையாக இயங்க வேண்டிய கட்டாயம் இருகிறது” என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், ”பேச்சல்ல, செயல் தான் ஒருவர் யார் என்பதற்கான அடையாளம். இங்கே பாஜகவின் மறைமுக ஆட்சி தான் நடக்கிறது என்றவர்களுக்கு இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் சரியான பதில் தந்துள்ளது. ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட பாஜக ஆதரவு கட்சிகளிடம் ஆதரவு கோராமல் காங்கிரஸ், இடதுசாரிகள், சனாதன எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது தவெக!
அதிலும் குறிப்பாக எந்த காங்கிரசை அழிக்க பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு களவேலை செய்து கொண்டுள்ளதோ, அந்த காங்கிரசின் தலைவரை அருகில் வைத்து பதவி ஏற்பு நிகழ்வை துணிச்சலாக நடத்தினார் விஜய். அதே போல மத்திய அரசின் கனவு திட்டமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தவெக அரசு துணிச்சலாக நிராகரித்து, வட தமிழக விவசாய பெருங்குடிகளின் வயிற்றில் பால் வார்த்தது.

காங்கிரசையும், விசிகவையும், முஸ்லீம் லீக்கையும் தனது அமைச்சரவைக்குள் இணைத்துக் கொண்டு இடதுசாரிகளின் ஆதரவோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியை பாஜகவின் மறைமுக ஆட்சி என்று பிரச்சாரம் செய்தது திமுக. உண்மையில் தலித்துகளையும், சிறுபான்மையினரையும் கணிசமாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆட்சியை – அதுவும் கிறிஸ்த்துவர் தலைமையிலான ஒரு ஆட்சியை – பாஜகவால் ஏற்க முடியாது என்பது மட்டுமல்ல, எந்த வகையிலாவது இடையூறு செய்து குடைச்சல் தருவார்கள் என்பதே யதார்த்தம். அது தான் நடந்து கொண்டும் உள்ளது.
பாஜகவின் இந்த எண்ணப் போக்கு தான் அது திமுக-அதிமுகவை இணைத்து தவெக ஆட்சி பொறுப்பேற்க முடியாத சதி திட்டத்தை அரங்கேற்றத் துடித்ததாகும். ஆக, தொடக்க நிலையிலேயே தவெக ஆட்சிக்கு வருவதை பாஜகவால் ஒரு சிறிதும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தவெக அரசு பாஜகவை எதிர்த்து பேசவில்லை…பாஜகவிற்கு பயப்படுகிறது…எனத் தொடர்ச்சியாக தவெக இமேஜை காலி செய்யும் பிரச்சாரத்தை கட்டமைத்தது திமுக.
மக்களுக்கு பல நன்மைகளை செய்ய வேண்டும் என தன்னளவில் பலவித கனவுகளோடு ஆட்சிக்கு வந்துள்ள புதியவரான விஜய் இயல்பிலேயே மத நல்லிணக்கத்தை விரும்புகிறார். எளியோர்களான – தலித்துகளுக்கு – ஏற்றமிகு பதவி தந்து மகிழ்கிறார். இந்த இயல்பே பாஜகவிற்கு எதிரானது தானே. ஆனால், பாஜகவிற்காக தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை விஜய். ஆக, தன் இயல்பே பாஜகவிற்கு எரிச்சலை தருகிறது என்ற உண்மையை நன்குணர்ந்த நிலையில், படு எச்சரிக்கையாக இயங்க வேண்டிய கட்டாயம் இருகிறது ஜோசப் விஜய்க்கு.

பாஜகவுக்கு எதிராக பேசுவதை விடவும் பாஜக திணிக்கும் மக்கள் விரோதமானவற்றுக்கு எதிராக காரியம் ஆற்றுவது தான் முக்கியம். வீரியத்தை வெளிப்படுத்தி சபாஷ் பெற்று, காரியத்திற்கு ஒத்துழைத்து சோரம் போகாமல், அமைதியாக காரியத்தில் சாதித்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு என்பது சமீபத்திய சட்டமன்ற தொடர் நிகழ்வில் வெளிப்பட்டுள்ளது. இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தவெக அரசு நிறைவேற்றிய நான்கு முக்கிய தீர்மானங்களுமே பாஜகவுக்கு எதிரானவை தாம்; மருத்துவ கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்புத் தீர்மானம்.
தமிழகத்தின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்களின் அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானம் முதலமைச்சர் விஜய்யால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சிறுபான்மையினரின் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக நல நிறுவனங்கள் ஆகியவற்றை நிதி ஆதாரங்களின்றி முடக்கும் எப்சிஆர்ஏ திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற பாஜக அரசுக்கு எரிச்சலூட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படுவதால் மக்களவை இடங்களை 543 என்ற எண்ணிக்கையிலேயே நிலையாக வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஆக, தெள்ளத் தெளிவாக மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளோடு முரண்படுவதை செயல் வழியே காட்டியுள்ளது தவெக அரசு.
உதயநிதி தஞ்சையில் பேசிய பேச்சு தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் அவர் இமேஜை பலமாக சரியச் செய்துவிட்டது. திமுகவின் ஊழல் அமைச்சர்கள் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பலமான பாஜக ஆதரவு லாபியால் விடுவிக்கப்பட்டு வருவதும், தன்னை காலி செய்யும் ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் கூட குற்றவாளிகளை தண்டிக்க முடியாத அளவுக்கு தவெக அரசு தள்ளப்பட்டிருப்பதும் மக்கள் மன்றத்தில் இந்த ஆட்சியாளர்களுக்கு ஒரு அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து திமுகவை அனைத்து நிலைகளிலும் காப்பாற்றி, நாம் தமிழக மக்களிடம் அவப் பெயரை பெற வேண்டுமா? என யோசிக்கத் தொடங்கியுள்ளனராம். இதுவே, இனி ஆவேசம் காட்ட முடியாது என சமரச சமிக்சையை சட்டமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படுத்தியதற்கான காரணமாகும்” எனக் கூறியுள்ளார்.
