https://republictn.com/

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் ஒரு பிரிவினர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் செயல்பட அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதன் உச்சகட்டமாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் பிரிந்து சென்று, முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.

இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். இந்த 53 ஆண்டு காலமாக அக்கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறோம். இந்தச் சூழலில் எங்கள் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், எந்த திமுகவை நாங்கள் எதிர்த்து வந்தோமோ அந்த திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராக்க தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.

நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்குள்ளானோம். அப்படி திமுக உடன் இணைந்தால் அதிமுகவே இல்லாமல் போய்விடும் என்று சொன்னோம். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது. அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் யாரையும் குறை கூறவில்லை.

அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு முன்பு இருந்த எந்த கூட்டணியிலும் இனி அதிமுக இருக்காது. இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும். புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்த தீர்மானத்தின் படி, தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்துள்ளோம். கொறடாவாக சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற குழு துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கட்சியின் மோசமான தேர்தல் செயல்பாட்டைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று சில எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக 234 தொகுதிகளில் 167 தொகுதிகளில் போட்டியிட்டு, 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பழனிசாமி தலைமையில் தொடர்ச்சியான எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்கள் நடைபெற்றன. பழனிசாமி கூட்டிய கூட்டங்களில், சண்முகம் மற்றும் வேலுமணி உள்ளிட்ட பல மூத்த அதிமுக தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும், அவர்களை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. கட்சிக்குள் தெளிவான பிளவு ஏற்பட்டுள்ளது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை மாற்றத்தை விரும்புகிறார்கள். பழனிசாமி தலைவராகத் தொடர்ந்தால், சில சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது” என்று முன்னாள் அதிமுக தலைவர் கே.சி.பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் தனித்தனி குழுக்களாக அமர்ந்திருந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன்மூலம், மாநிலத்தின் இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகியவற்றின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. திமுக 59 இடங்களை வென்றது, இது முந்தைய தேர்தலை விட கணிசமான சரிவாகும். இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக 47 இடங்களையும், பாமக நான்கு இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றின.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago