தமிழக அரசியலில் தற்போது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் வெளிப்படையான பகீர் குற்றச்சாட்டு. “ரூ.500 கோடியை வாங்கிக்கொண்டு கள்ளத்தனமாக லாட்டரி விற்கச் சொன்னார்கள்” என நேரடியாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் மீது அவர் வைத்துள்ள விமர்சனம், அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணியும் பகீர் பேரமும்
வெளிமாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரித் தொழிலை, தமிழகத்திலும் கள்ளத்தனமாக நடத்திக்கொள்ள திமுக ஆட்சி தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டதாகக் கூறப்படுவது உச்சகட்ட அதிர்ச்சி. “ரூ.500 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு, இந்த ஆட்சியே உங்களதுதான்” என திமுக தலைமை வாக்குறுதி அளித்ததாகவும், ஜிஎஸ்டி சிக்கல் வராமல் இருக்க அந்தப் பணம் வங்கிக் கணக்கு மூலமாகவே வழங்கப்பட்டதாகவும் ஜோஸ் சார்லஸ் போட்டுடைத்துள்ளார்.
சட்டப்பூர்வ உரிமமும் நிராகரிப்பும்
இது குறித்து மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அளித்த பேட்டியில், ”வெளி மாநிலங்களில் லாட்டரி சீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. 1-ம் நம்பர், 2-ம் நம்பர் லாட்டரி சீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அது போல் தமிழகத்திலும் கள்ளத்தனமாக ஓட்டிக் கொள்ளுங்கள் என திமுக குடும்பத்தினர் எங்களிடம் கூறினர். ஆனால், அதை தமிழகத்தில் கள்ளத்தனமாக செய்ய மாட்டோம் எனக் கூறிவிட்டோம். அதில் நாங்கள் உறுதியாக நின்றோம்” என்றார்.

அப்படியானால் திமுகவுக்கு ஏன் 500 கோடி கொடுத்தீர்கள்? எனக் கேட்டதற்கு, ”நாங்கள் கொடுத்த 500 கோடி பணத்தை வாங்கிக் கொண்டு, ”இந்த ஆட்சியே உங்களோடதுதான் என்று ஆரம்பித்தார்கள். அந்த பணத்தால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் வரும், ஆகையால் அக்கவுண்டில் செலுத்துகிறோம் என்பது எங்களது கோரிக்கையாக இருந்தது. பணத்தை வாங்கிய பிறகு ”இங்கு லாட்டரியை நீங்கள் கள்ளத்தனமாக பண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என ஸ்டாலினும், உதயநிதியும் கூறினார்கள்.
ஆனால், எங்கள் அப்பா ரொம்ப தெளிவாக அவர்களிடம், ” எங்களுக்கு பணத்திற்கு எந்த குறையும் இல்லை. கடவுள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறோம். நாங்கள் இனி செய்யக் கூடிய தொழில், எங்களது அடுத்த தலைமுறைக்கு எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். என்னால் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் எனது அடுத்த தலைமுறைகளுக்கு வழக்குகளை சேர்த்து வைக்கக் கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது. ஆகையால் சட்டப்பூர்வமாக லைசென்ஸ் கொடுங்கள் எனக் கேட்டார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த ஸ்டாலினும், உதயநிதியும் மறுத்து விட்டு கள்ளத்தனமாக லாட்டரி விற்கச் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. ஆகையால் மாற்று ஏற்பாடாக டாஸ்மாக்கை எடுத்து நடத்தலாம் என நினைத்தோம். ஏனென்றால் அதில் 30000 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்தால் 60000 கோடி வருமானம் வரும் எனத் தெரியும். அதில் கணக்கு காட்டுவது குறைவு. வருமானம் இல்லீகலாக குவியும்” எனத் தெரிவித்துள்ளார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் இந்தத் திடுக்கிடும் தகவல்கள் வெறும் அரசியல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல; தமிழகத்தின் நிதி ஆதாரங்களும், நிர்வாகமும் எவ்வாறு ஆழமான பேரம் மற்றும் கறுப்புப் பண வலைக்குள் சிக்கியுள்ளன என்பதற்கான வெளிப்படையான சாட்சி. வெளிப்படைத்தன்மை கொண்ட அரசு எனச் சொல்லிக்கொண்டு வந்த திமுக, இந்த 500 கோடி ரூபாய், கள்ள லாட்டரி விவகாரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே இப்போது தமிழகத்தின் ஹாட் டாபிக்!
