திமுகவை மொத்தமாக நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான கவுண்ட்டவுனையும் அதிரடியாக ஸ்டார்ட் செய்திருக்கும் விஜய், முதற்கட்டமாக ஆறு முன்னாள் அமைச்சர்களுக்குத் தப்பிக்கவே முடியாத அளவிற்கு சக்கர வியூகம் அமைத்திருப்பதுடன், தொடர்ந்து திமுக தலைமைக்குமே பக்கா டார்கெட் வைத்திருப்பதாகவும் வரும் தகவல்கள்தான் அறிவாலயத்தின் பல்ஸை எகிற வைத்துள்ளது.
தவெக தலைவர் விஜயின் அதிரடி கவுண்ட்டவுனில் திமுக மாஜிக்கள் தொடர்பான ஏகப்பட்ட வழக்குகள் வேகமெடுத்துள்ளன. இதில் முக்கியத் துருப்புச் சீட்டாக 2024-ல் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு மாறவிருக்கிறது.
குறிப்பாக, இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் உள்ள அரசியல் தொடர்புகள் விசாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.
அதாவது, இந்த வழக்கில் ஸ்கிராப் பிசினஸ் பஞ்சாயத்தில் தேசியக் கட்சியின் முன்னாள் மாநிலப் புள்ளி, சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
தவிர, தனது குடும்ப வாரிசின் தனிப்பட்ட விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் கை இருந்தது என்ற வன்மத்தில் இருந்த முக்கிய முன்னாள் அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற பேச்சும் இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ரவுடி திருவெங்கடம் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டான். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுன்டர் செய்யப்பட்டான்.
கஸ்டடியில் திருவெங்கடம் ஏதாவது வாய் திறந்திருக்கலாம். அதை அவன் நீதிமன்றத்திலும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே கொல்லப்பட்டிருக்கிறான் என்று அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. இப்படியான சூழலில்தான் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது உயர்நீதிமன்றம். ஆனால் திமுக அரசு இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது.
அப்போது சென்னை வந்திருந்த பிஎஸ்பி அகில இந்திய தலைவர் மாயாவதி, தமிழக அரசிற்கு இந்தக் கொலையில் எந்த சம்பந்தமும் இல்லை என்றால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பேசியிருந்தார். அப்படி இருந்தும் திமுக அரசு சிபிஐ விசாரணையை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? யாரைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில்தான் தற்போதைய தவெக அரசு, சிபிஐ விசாரணைக்கு எதிராக கடந்த திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மனுவை வாபஸ் பெற்று, சிபிஐ விசாரணைக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது. அதன்படி, சிபிஐ விசாரணை மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்து தொடங்கும்.
திருவெங்கடத்தை கஸ்டடியில் எடுத்த ஏசி வரதராஜன் ஏன் விசாரணையிலிருந்து தூக்கப்பட்டார்? ஏசி சரவணன் ஏன் சம்பந்தம் இல்லாமல் கொண்டுவரப்பட்டார்? புகாரி என்ற தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் எப்படி அந்நேரத்தில் திருவெங்கடத்தை சுட்டார்? உள்ளிட்ட கேள்விகளுடன் விசாரணை வேகம் எடுக்கும்.
அதன்படி, அரசியல் ரீதியாக சந்தேகிக்கப்படும் மேற்கண்ட புள்ளிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். மேலும், தலைமறைவாக உள்ள சம்பு செந்திலின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்து, அவனை சரணடைய வைத்து, ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் என்ன நடந்தது எனச் சொல்ல வைக்கவும் அவனது கேங் மூலம் முயற்சிகள் நடக்கின்றன.
இதுபோக, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தவெக காவலரை தாக்கியதாக நான்கு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு இருக்கிறது. அதைத் தொடர்ந்து, சேகர்பாபுவிடம் தொலைபேசியில் வாக்குவாதம் செய்த ரவுடி தன்ராஜையும் ஏதாவது ஒரு ரூபத்தில் அப்ரூவராக மாற்றி, சேகர்பாபு என்னென்ன செய்திருக்கிறார் என்பதை வெளிக்கொணரவும் தவெக தீவிரமாக இருக்கிறது.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் தற்காலிக காவலாளி அஜித்குமார், நிகிதா என்பவரின் நகையைத் திருடியதாகக் கூறப்பட்ட புகாரில் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் அஜித்குமார் எந்த நகையையும் திருடவில்லை. அங்கு திருட்டே நடக்கவில்லை என்று சிபிஐ விசாரணையை முடித்து வைத்தது. இதை அடுத்து, நகை திருட்டே நடக்கவில்லை என்றால் எதற்காக போலீசார் இவ்வளவு கொடூரமாகத் தாக்கி அவரைக் கொன்றனர் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையும் தவெக அரசு தோண்டி எடுக்கிறது.
