இந்தியாவின் ‘லாட்டரி அதிபர்’ என்று பரவலாக அறியப்படும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தியாகு மார்ட்டின், சமீபகாலமாகத் தொடர்ந்து சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மாபெரும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இது தேசிய அளவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ட்டினுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை கீழமை நீதிமன்றம் முன்பு முடித்து வைத்திருந்தது. எனினும், சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 22 இடங்களில் அமலாக்கத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தினர்.
குறிப்பாக, கோவையில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகம், சென்னையில் உள்ள போயஸ் கார்டன், தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுன் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்றது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள்பல நாட்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.12.41 கோடி ரொக்கப் பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், மார்ட்டினின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.6.42 கோடி மதிப்பிலான நிரந்தர வைப்புத் தொகையும் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மற்றும் மேகாலயா மாநில அரசுகளின் லாட்டரிகளை முறைகேடாக விற்று வருமானம் ஈட்டியது மற்றும் அதன் மூலம் அந்த மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது ஆகியவை மார்ட்டின் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாகும். லாட்டரி விற்பனை மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை, சுமார் 350-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மூலமாக முதலீடு செய்து, மிகப்பெரிய அளவில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ. 1,300 கோடிக்கும் அதிகமான நிதியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மிகப்பெரிய தனிநபர் கொடையாளியாகவும் மார்ட்டின் அறியப்படுகிறார். லாட்டரி விற்பனை மூலம் பல மாநிலங்களில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மார்ட்டின், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த தீவிர சோதனைகளும், முடக்கப்படும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்களும் அவரது லாட்டரி மற்றும் தொழில் சாம்ராஜ்யத்திற்கு மிகப்பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.
