https://republictn.com/

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காததால் அல்லாடிய தவெக ஒரு வாரமாக ஆளுநர் மாளிகைக்கும், திமுக கூட்டணி கட்சி அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 120 தொகுதிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது.

60 ஆண்டுகால அரசியலில் முதன் முதலாக திராவிட கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் மசூடம் சூடியுள்ளது. அதிக தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் விக்கிரவாண்டி மாநாடு முதல் சென்னையில் நடந்த கடைசி தேர்தல் பிரசாரம் வரை விஜய் திமுகவுக்கு எதிராக இரண்டு விஷயங்களை ஸ்ட்ராங்காக பயன்படுத்தினார். ஒன்று பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மற்றொன்று தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது, டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதைத் தான். எனவே தவெக ஆட்சி அமைத்தால் தமிழகம் அமைதிப்பூங்காவாக மாறும் போதைப்பொருள் புழக்கம் அடியொடு அழிக்கப்படும் என விஜய் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழித்து, இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பதே தனது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த விஜய், நேற்று முதலமைச்சராக பதவியேற்றதுமே 3 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில்,”பூஜ்ய போதைப்பொருள்” (Zero Drug Tolerance) கொள்கையை நிலைநாட்டும் வகையில் கோப்புகளில் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைப் பாதுகாக்கவும் மாநிலம் முழுவதும் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்படும் என்றும், போதைப்பொருள் குற்றங்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க, மாவட்ட அளவில் சிறப்புக் காவல் படை அலகுகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் தவெக அரசு களமிறங்கும் முன்பாகவே இடியை இறக்குவது போன்ற சம்பவம் நடந்துள்ளது. கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டு இருந்தார். அப்போது 1வது பிளாட்பாரத்தில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் வந்து நின்றது.

அந்த ரயிலில் போலீசார் ஏறி சோதனை மேற்கொண்டனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டில் சோதனை செய்த போது 2 வடமாநில வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பீகாரைச் சேர்ந்த விகாஷ் குமார் (26) மற்றும் சந்தோஷ்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா சாக்லெட் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தவெக பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago