சேலம் மாவட்டம் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன், திருத்தொண்டர் அறக்கட்டளையின் தலைவராக இருந்து வருகிறார். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எதிர்த்தும், அவற்றை மீட்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து பல பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து வருகிறார்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் அமைந்துள்ள அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோடலம்மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி மற்றும் திருமலைத் தேவர் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றி, நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏ. ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோடலம்மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி மற்றும் திருமலைத் தேவர் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலங்கள் நீண்டகாலமாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது
மேலும், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து முறைகேடாக வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து பலமுறை புகார் அளித்தும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறையிடம் புகார் அளித்தபோது, இது சிவில் வழக்கு தொடர்பான பிரச்சினை எனக் கூறி நடவடிக்கை எடுக்க மறுத்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 2023-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை , எனவே சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரான திருத்தொண்டர் அறக்கட்டளைத் தலைவர் ஏ. ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
மேலும், பல தனியார் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் குத்தகைத் தொகை மற்றும் வாடகையை செலுத்தாமல் கோயில் சொத்துகளை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், சிலர் அந்தச் சொத்துகளை தங்களுடையது போல உரிமை கொண்டாடி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு , இந்து சமய அறநிலையத் துறை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் உள்ள கோடலம்மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி மற்றும் திருமலைத் தேவர் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 12 வாரங்களுக்குள் அகற்றி, நிலங்களை மீட்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி கோயில் சொத்துகளை பாதுகாப்பது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சட்டப்படி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கோயில்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
