நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஜேசன் சஞ்சயும், தனது முதல் திரைப்படமான ‘சிக்மா’ வெளியீட்டை முன்னிட்டு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், தனது சினிமா பயணம், தந்தை விஜய் வழங்கிய அறிவுரைகள், இசையமைப்பாளர் தமன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். தமனின் தீவிர ரசிகரான சஞ்சய், “இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் பிரமாதமாக வந்துள்ளது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான இசையை தமன் உருவாக்கியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

நேர்காணலில் தந்தை குறித்து பேசிய சஞ்சய், “எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதலில் என் மனதில் தோன்றுவது என் அப்பாதான்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், இயக்குநராக தனது பயணத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு இயக்குநரின் பொறுப்பு என்ன என்பன குறித்து தந்தை விஜய் தனக்கு வழங்கிய அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன், தனது பெற்றோருக்கே ஜாலியாக பிராங்க் கால் செய்து ஏமாற்றிய சிறுவயது குறும்பு சம்பவங்களையும் அவர் சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநராகப் பொறுப்பேற்றவுடன் பலரும் தனது வயதைக் கருத்தில் கொண்டு காதல் திரைப்படம் இயக்குவார் என்று எதிர்பார்த்ததாக சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், தனக்கு இரண்டு பேரை மையமாகக் கொண்ட காதல் கதைகளை இயக்குவதில் ஆர்வம் இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட குழுவை மையமாகக் கொண்ட ஹெய்ஸ்ட் (Heist) அல்லது அட்வென்ச்சர் பாணி திரைப்படங்களில்தான் அதிக ஈர்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகே நடிகராக களமிறங்குவது குறித்து யோசிப்பேன் என்றும், படம் வெளியான பிறகு தொடர்ந்து இயக்குநராகவே செயல்படலாமா அல்லது கேமரா முன் நடிகராக வரலாமா என்பதை முடிவு செய்வேன் என்றும் சஞ்சய் கூறியுள்ளார்.

அதேபோல், தனது முதல் படத்திலேயே தந்தை விஜய்யை இயக்க விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கனடாவில் திரைப்படக் கல்வியை முறையாகப் பயின்றுவிட்டு வந்த பிறகு, தனது திறமையை முதலில் நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே முதல் படத்தில் பெரிய நட்சத்திரத்தைத் தேர்வு செய்யாமல், நடிகர் சந்தீப் கிஷனை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
முதலில் ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விஜய் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாகும் காலத்துடன் பாக்ஸ் ஆபீஸ் மோதலைத் தவிர்க்கும் வகையில், ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்படலாம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் தலைப்பு குறித்தும் சஞ்சய் விளக்கம் அளித்துள்ளார். ‘சிக்மா’ என்பது யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திருக்காமல், சமூகம் தன்னை ஒரு ‘அண்டர்டாக்’ எனக் கருதினாலும், தனித்துவமாக சிந்தித்து தனது பாதையில் பயணிக்கும் ஒரு சுதந்திரமான மனிதரை குறிக்கும் சொல் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தலைப்பு கதாநாயகனுக்கு மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெறும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் பயணத்திற்கும் பொருத்தமாக இருந்ததால், படப்பிடிப்பின் பாதி முடிந்த பிறகே இந்தப் பெயர் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் தனது கதையை எழுதி முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அப்போது, தந்தை விஜய்யை விட நடிகர் விஜய் சேதுபதியை முதன்முறையாக நேரில் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமடைந்து சில நிமிடங்கள் பேச முடியாமல் நின்றுவிட்டதாக சஞ்சய் தெரிவித்துள்ளார். பின்னர் துபாய் வாழ்க்கை, சென்னை மற்றும் சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் இயல்பாக உரையாடியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ‘சிக்மா’ திரைப்படம் தொடங்கியபோது நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நேரில் வந்து தனது படக்குழுவினரை வாழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் மிக முக்கியமான இடைவேளை (Interval Block) காட்சியை, ஒரு பிரம்மாண்ட ஜவுளிக் கடையின் நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் படமாக்கியதாக சஞ்சய் கூறியுள்ளார். காகிதத்தில் எழுதும்போது சாதாரணமாகத் தோன்றிய அந்தக் காட்சியை திரையில் பிரம்மாண்டமாக உருவாக்குவது மிகவும் சவாலாக இருந்ததாகவும், அந்தக் காட்சி படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கனடாவில் திரைப்படக் கல்வியை முடித்துவிட்டு வந்தபோதே தன்னிடம் இரண்டு அல்லது மூன்று கதைகள் தயாராக இருந்ததாகவும், தனது சித்தப்பாவும் நடிகருமான சஞ்சீவ் மூலமாக தயாரிப்பாளர் தமிழ் குமரனின் அறிமுகம் கிடைத்ததாகவும் சஞ்சய் கூறியுள்ளார்.
அதன் பிறகே இந்தக் கதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தலைவர் சுபாஸ்கரனிடம் சென்றது. அவரது ஒப்புதலுக்குப் பிறகே ‘சிக்மா’ திரைப்படம் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒவ்வொரு இயக்குநருக்குள்ளும் ஒரு நடிகர் இருப்பார். நடிகர்களிடம் ஒரு காட்சியை எதிர்பார்ப்பதை விட, அதை முதலில் இயக்குநரே நடித்துக் காட்ட வேண்டும். அதுபோல என்னுள்ளும் ஒரு நடிகர் இருக்கிறார்” என்று சஞ்சய் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பயணிக்க விருப்பம் இருப்பதாகக் கூறிய அவர், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தனது ரோல் மாடலாகக் கருதுவதாகவும், அவரைப் போல இயக்கத்தையும் நடிப்பையும் சமநிலையுடன் தொடர வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் படத்தின் மூலம் இயக்குநராக தனது திறமையை நிரூபிக்கத் தயாராக இருக்கும் ஜேசன் சஞ்சய், சினிமாவில் தனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.
