“நான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் ஒரு சாதாரண வேலைக்காரன்” என பாகிஸ்தான் அமைச்சர் பேசியது அதிர்ச்சியையும், மக்களின் கோபத்தையும் கிளப்பியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அலி பர்வேஸ் மாலிக், “பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான அணியின் ஒரு சாதாரண வேலைக்காரனாக, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய விலைகள் குறையும்போது, அதே வேகத்தில் நாங்களும் இங்கே விலைகளைக் குறைப்போம் என்று பொதுமக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.
அமைச்சரின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினையைத் தூண்டின. பாகிஸ்தானின் “கலப்பின” ஆட்சி முறை என்று பலரும் அழைக்கும் இராணுவத்தைத் திருப்திப்படுத்த, ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் எந்த அளவிற்குச் செல்லும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். ஃபாத்திமா மாலிக் எக்ஸ்தளத்தில், “அமைச்சர்கள் தங்களை மக்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்வதற்குப் பதிலாக, சக்திவாய்ந்தவர்களின் ‘பணிவான வேலைக்காரர்களாக’ காட்டிக்கொள்கிறார்கள். இது ஜனநாயகமா அல்லது விசுவாசமான ஊழியர்களின் அரசவையா?” எனக் கேள்வி எழுகிறது” என்று கூறியுள்ளார்.
மொஹ்சின் அலி கான் கூறுகையில், “அலி பெர்வேஸ் மாலிக் உண்மையைத்தான் பேசுகிறார் – இன்று ஒரு மத்திய அமைச்சர் என்பவர் ஒரு ராணுவ ஜெனரலின் பணிவான வேலைக்காரரைத் தவிர வேறில்லை” என்கிறார். வக்கார் அகமது, “ஒரு ஃபீல்ட் மார்ஷலின் பணிவான வேலைக்காரர். பிஎம்எல்-என் கட்சி இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கிவிட்டது, இப்போது அதை ஒரு அரசியல் கட்சி என்று அழைப்பது அரசியலையே அவமதிப்பது போல் தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் மலீஹா ஹாஷ்மி சமூக ஊடகத்தில், “இப்போது அமைச்சர்கள் அரசியல் கட்டுப்பாட்டின் பாசாங்கிலிருந்தும் முற்றிலும் விடுபட்டவர்களாகத் தெரிகிறார்கள். ஜனநாயகத்தைக் காப்பதாகப் பாசாங்கு செய்வதையும் அவர்கள் முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டனர். நம்பமுடியாதது” என்று பதிவிட்டார். மூத்த தொலைக்காட்சி தொகுப்பாளர் தலத் ஹுசைன், அமைச்சர்கள் பொதுமக்களுக்கு “நிவாரணம்” வழங்குவது பற்றிப் பேசிவிட்டு, அதே நேரத்தில் பெட்ரோலிய விலையை கடுமையாக உயர்த்தி குடிமக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவது “வெட்கக்கேடானது” என்று கூறினார்.
“மிகப்பெரிய மக்கள் தொகையினர் மோசமான பொருளாதாரச் சூழலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அமைச்சர்கள் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் அமர்ந்துகொண்டு தங்கள் பணிகளுக்காக ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வது இன்னும் வெட்கக்கேடானது,” என்று அவர் கூறினார். மேலும் அவர், “போரில் கிடைக்கும் வெற்றி, மக்களின் இன்னல்களைப் புறக்கணிக்கத் தங்களுக்கு உரிமம் அளித்துவிடும் என ஒட்டுமொத்த ஆளும் கட்டமைப்பும் நம்புவதாகத் தெரிகிறது. இது வெட்கக்கேடானதை விடவும் மோசமானது,” என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், தங்கள் நாட்டில் “கலப்பின அமைப்பு” இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
