கரூரில் நடைபெற்ற தனியார் செல்போன் ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசனைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவரை நேரில் கண்ட உற்சாகத்தில் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற முண்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, “I Mobiles” நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஷோரூம் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 25-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனத்தின் புதிய கிளையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார்.

அவர் வருகை தருவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால், மாலை நேரம் முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குவிந்தனர். ஸ்ருதி ஹாசன் வந்தடைந்தவுடன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். அவரை நெருக்கமாகப் பார்க்கவும், கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் பெறவும் ரசிகர்கள் போட்டிப்போட்டு முன்னேறியதால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி, ஸ்ருதி ஹாசனை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், பல ரசிகர்கள் அவரைச் சுற்றி நின்று கையெழுத்து வாங்க முயன்றதால் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ருதி ஹாசன், கரூர் மக்களின் உற்சாக வரவேற்பால் மிகவும் நெகிழ்ந்ததாக தெரிவித்தார்.
“எல்லோருக்கும் வணக்கம். கரூரில் நீங்கள் அளித்துள்ள இந்த பிரம்மாண்டமான வரவேற்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நீங்கள் அனைவரும் மிகவும் அன்பானவர்கள். இந்த அன்புக்கு மனமார்ந்த நன்றி,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த ‘3’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான “கண்ணழகா…” பாடலை மேடையிலேயே பாடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அவர் பாடலைப் பாடியவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
பின்னர் தனது ‘3’ திரைப்படத்தில் நடித்த ‘ஜனனி’ என்ற கதாபாத்திரத்தை நினைவுகூர்ந்த ஸ்ருதி ஹாசன், “இங்கு யாராவது ‘ஜனனி’ என்று சொன்னாலே, எனக்கு உடனே உங்கள் அனைவரின் அன்புதான் நினைவுக்கு வருகிறது,” என்று புன்னகையுடன் கூறினார்.

இதற்கிடையில், கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் “கல்யாண சாப்பாடு!” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினர். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த ஸ்ருதி ஹாசன், “கல்யாண சாப்பாடு சாப்பிட நான் எப்போதுமே ரெடி!” என்று கூறியதும், ரசிகர்கள் சிரிப்பிலும் கைதட்டலிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஸ்ருதி ஹாசனைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் திரண்டதால், கரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஸ்ருதி ஹாசனின் காரின் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை போலீசார் கவனித்து, உடனடியாக விசாரணை நடத்தினர். அவர் போதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பு கருதி அவரை அங்கிருந்து அகற்றினர்.
நடிகை ஸ்ருதி ஹாசனின் வருகை, ரசிகர்களின் உற்சாக வரவேற்பு, அவர் பாடிய “கண்ணழகா” பாடல், ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்த சம்பவம் உள்ளிட்டவை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக அமைந்தன. இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
