https://republictn.com/

108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க ஆட்சியை அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கோரி வருகின்றனர்.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், விசிக-வை த.வெ.க-வின் எந்த முக்கிய நிர்வாகியும் சந்தித்ததாக எந்தப் புகைப்படமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், நேற்று த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு விசிக முழு ஆதரவை வழங்க வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் பிரதான கோரிக்கையாக இருந்துள்ளது.

விசிக அதிரடி ‘டிமாண்டுகள்’
ஆதரவு தருவதற்குப் பதிலாக விசிக தரப்பில் சில அதிரடியான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘ஆட்சியில் அதிகாரப் பகிர்வு’ என்பதில் விசிக உறுதியாக உள்ளது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ‘துணை முதல்வர்’ பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், மற்றொரு விசிக எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திருமாவளவனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற டிமாண்ட் த.வெ.க-வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை திருச்சி கிழக்கில் போட்டியிடும் பட்சத்தில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் திருமாவளவன் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் விரிசலா?
தற்போது திமுக கூட்டணியில் அங்கமாக இருக்கும் விசிக, த.வெ.க-வின் அழைப்பை ஏற்றுத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி த.வெ.க-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், விசிக-வும் இணைந்தால் விஜய்யின் ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகிவிடும். இது குறித்து விசிக-வின் உயர்மட்டக் குழு விரைவில் கூடி இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகள் அதிருப்தி
த.வெ.க. தனது முதல் மாநாட்டிலேயே ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்பதை அறிவித்திருந்தது. இருப்பினும், வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துள்ள விசிக, துணை முதல்வர் பதவி கேட்பது த.வெ.க. நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை விஜய்யைப் ‘பாஜகவின் கைக்கூலி’ என மேடைதோறும் கடுமையாகச் சாடி வந்த திருமாவளவன், இன்று அதே விஜய்யிடம் அதிகாரத்திற்காகப் பேரம் பேசுவது தார்மீக ரீதியாகச் சரியானது தானா என்ற கேள்வியையும் த.வெ.க. தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த இழுபறிக்கு நடுவே, விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago