Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா என்ற வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்களின்படி, ரூ.9.80 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலைப் பணிக்கான பில் ஒப்புதல் பெறுவதற்காக லஞ்சம் கேட்டதாகவும், ரூ.1.30 லட்சமாக தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஒப்பந்ததாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ரூ.1 லட்சம் பணம் டிஜிட்டல் பரிவர்த்தனை (PhonePe) மூலம் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.30 ஆயிரம் நேரடியாக ரொக்கமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த லஞ்சப் பரிமாற்றம் தொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, “தவெக ஆட்சியில் லஞ்சமா?” என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அரசியல் ரீதியாக சவாலாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  எதிர்க்கட்சிகளின் ஸ்கெட்ச் காலி! CM விஜய்யின் மாஸ் என்ட்ரி… அதிரும் கரூர் அரசியல்!"

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருந்த முதலமைச்சர் விஜய், “உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் பயப்படாமல் ‘இல்லை’ என்று சொல்லுங்கள்; நான் உங்களுடன் இருப்பேன்” என்று உறுதியளித்திருந்தார்.

அதேபோல், தமிழக சட்டமன்றத்திலும் “மக்கள் பணத்தை நாங்கள் தொடமாட்டோம். தவறுகளை யாரையும் செய்ய விடமாட்டோம். விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வெகுமதி வழங்கும் திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தவெக நிர்வாகி ஒருவரே லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், கட்சியின் ஒழுக்கத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது கட்சி ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ஆட்சியைக் கவிழ்க்க தயாரான 8 தவெக எம்.எல்.ஏ-க்கள்..! செந்தில் பாலாஜி நெட்வொர்க்கின் பகீர் பின்னணி..!

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. மேலும், வீடியோவின் உண்மைத் தன்மை குறித்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago