அமெரிக்கா -ஈரான் இடையே சமீபத்திய ராணுவ மோதல்களைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தன்னை படுகொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாகப் பேசிய டிரம்ப், தன்னை ஈரானின் “முதல் டார்க்கெட்” என்று கருதுவதாகவும், ஈரானியத் தலைமையின் ஒரு பகுதியினர் தனக்கு எதிராகப் பழிவாங்க முயலலாம் என்றும் குறிப்பிட்டார்.
“அவர்களுக்கு இருந்த தலைவர்கள் போய்விட்டார்கள். அவர்களுக்கு இருந்த மற்றொரு குழுவினரும் போகலாம். நானும்கொல்லப்படலாம். ஏனென்றால் நான் தான் அவர்களின் முதன்மை இலக்கு. அவர்கள் கேவலமானவர்கள். அவர்கள் அப்படித்தான். 47 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகிறார்கள். ஈரானின் முந்தைய தலைமை விரோதப் போக்குடையதாக இருந்தது. அந்நாட்டின் தற்போதைய தலைவர்கள் அதிக பகுத்தறிவுடன் செயல்படுவதாகக் கூறுகிறார்கள். ஈரானுடனான பதற்றத்தை நீட்டிக்காமல், அந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” ” என்று டிரம்ப் கூறினார்.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் நிலைப்பாடு கடுமையாவதைக் குறிக்கும் வகையில், நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரான் உடனான ஒப்பந்த முயற்சிகள் “முடிந்துவிட்டன” என்று அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இப்படி பேசியுள்ளார்.
இன்று இரவு ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். “இன்று இரவு நாங்கள் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம்,” என்று ஈரானைக் குறித்து அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் டிரம்ப் கூறினார்; மேலும், “அவர்கள் தினமும் ஒப்பந்தத்தை மீறுகிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர்நிறுத்தம் இன்னும் நடைமுறையில் உள்ளதா? என்று கேட்கப்பட்டபோது, “என்னைப் பொறுத்தவரை, அது முடிந்துவிட்டது,” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், புதன்கிழமை காலை அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
“தெற்கு ஈரானில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்க பயங்கரவாத ராணுவம் இன்று காலை நடத்திய குற்றவியல் ஆக்கிரமிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பண்டார் அப்பாஸ் (தெற்கு) மற்றும் புஷெஹர் (தென்மேற்கு) ஆகிய இடங்களில், இஸ்லாமிய குடியரசு ஈரானின் விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த எட்டு துணிச்சலான வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்” என்று ராணுவத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
ஈரான் மீதான “ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள்” மூலம் அமெரிக்கா ஒப்பந்தத்தின் கட்டமைப்பை மீறியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
