அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கிளம்பியுள்ள புகார்கள் தவெக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், “யார் அதிகம் கொடுக்கிறார்களோ… அவர்களுக்குத் தான் பதவி” என்கிற ரீதியில் பல கோடிகள் கைமாறி இருப்பதாகக் கட்சிக்குள்ளேயே மூத்த நிர்வாகிகள் குமுறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தவெக-வின் அடிமட்டத் தொண்டர்கள், நீண்ட நாட்களாகக் கட்சிக்காக உழைத்த வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது இது உயர் நீதிமன்றத்தில் வழக்காகவும் உருவெடுத்துள்ளது.
லிஸ்ட்டில் திமுக – அதிமுக – பாஜக வக்கீல்கள்
இந்தப் புகாரில் மிக முக்கியமான அதிர்ச்சி என்னவென்றால், பணம் கொடுத்துப் பதவி வாங்கிய வழக்கறிஞர்களின் பட்டியலில் பெரும்பாலும் தவெக-வினர் இல்லை என்பதுதான். அதற்கு மாறாக திமுக, அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களே இந்த லிஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனவாம்.
அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தங்களின் சுயலாபத்திற்காக, பதவிக்கு வருபவர் யார், எந்தப் பின்னணியைக் கொண்டவர், கட்சிக்கு விசுவாசமானவரா? என்று கூட விசாரிக்காமல் புகுந்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் சில கோடி ரூபாய் டீல்?
இதுமட்டுமன்றி, தவெக-வின் மாநில வழக்கறிஞர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கும் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள “அறிவான” ஒரு நபர், சென்னையில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை வைத்துக் பல கோடிகளுக்கு கல்லா கட்டியிருப்பதாகத் தவெக வட்டாரத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
செக் வைத்த அமைச்சர் நிர்மல் குமார்
விவகாரம் எல்லை மீறிப் போய், நீதிமன்றம் வரை சென்றதைத் தொடர்ந்து இந்த ஒட்டுமொத்த குளறுபடிகளுக்கும், கல்லா கட்டியவர்களுக்கும் செக் வைக்கும் விதமாகத் தவெக தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ”தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த ஆறு மாத காலத்திலும் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அவர்களின் பணி திருப்திகரமாக இல்லை என்றாலோ அல்லது முறைகேடுகள் உறுதியானாலோ அவர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். நீக்கப்படும் இடங்களுக்குக் கட்சிக்காக உண்மையாக உழைத்த தகுதியான வழக்கறிஞர்கள் மட்டுமே இனி நியமிக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அரங்கேறியுள்ள இந்த பண வேட்டை, தவெக-வின் உள்கட்சி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த ‘6 மாத கெடு’ அதிரடி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குச் சரியான சம்மட்டி அடியாக இருக்குமா? தற்போதைய சமாளிப்பா? என்கிற கேள்வியும் எழுகிறது.
