https://republictn.com/

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடியாக மாறியுள்ளது. இந்நிலையில், கோட்டையின் அதிகார மையத்தைக் கைப்பற்றப் போவது யார்? என்கிற போட்டி இப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் அனுபவம் வாய்ந்த அமுதா ஐ.ஏ.எஸ், மறுபுறம் விஜய்க்கு நெருக்கமான நடிகை திரிஷா என இரு வேறு சக்திகளுக்கிடையே நடக்கும் இந்த நிழல் யுத்தம் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.


இது குறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர், ‘ ‘அமுதா ஐ.ஏ.எஸ் தனது நிர்வாகத் திறமைக்காக 2020-ல் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியவர். டெல்லியில் இருந்த அந்தத் தருணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சகத்துடன் நெருக்கமாகச் செயல்பட்டவர். ஒரு ‘ரிசல்ட் ஓரியண்டட்’ அதிகாரி என்பதால் மத்திய அரசு அவர் மீது மிகுந்த மதிப்பைக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உருவெடுத்தார் அமுதா. கருணாநிதியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை எவ்வித அசம்பாவிதமும் இன்றி ஒருங்கிணைத்தது முதல், கரூரில் நடந்த அசம்பாவிதங்களுக்கு அரசுத் தரப்பு விளக்கத்தை அளித்தது வரை அமுதாவின் பங்கு முக்கியமானது. தமிழக வரலாற்றில் மிகச்சில பெண் அதிகாரிகள் மட்டுமே அலங்கரித்த ‘உள்துறைச் செயலாளர்’ பதவியை வகித்து சட்டம்-ஒழுங்கைக் கையாண்டார்.

அதேநேரம், அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் உண்டு. மூத்த அதிகாரிகள் பலரைத் தாண்டி இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் முணுமுணுப்புகள் எழுந்தன. அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இவர் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் தாமதம் காட்டியதாக இவர் மீது பல நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டன. தற்போதைய தேர்தல் நேரத்தில், காவல்துறை நிர்வாகம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக தவெகவும், எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தன.

அமுதா vs திரிஷா: தவெக ஆட்சியில் அதிகாரப் போட்டி!
தற்போது தவெக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வாக அமுதா ஐ.ஏ.எஸ் விஜய் ஆட்சியில் முக்கிய நிர்வாகப் பதவியைப் பெற முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். இதற்காக “எனக்கு அமித் ஷாவின் முழு ஆதரவு உண்டு” என்கிற லாபியை அவர் உருவாக்கி வருகிறார்.

இன்னொரு பக்கம், விஜயின் நெருங்கிய தோழியான நடிகை திரிஷா, தவெக ஆட்சியில் ஒரு அதிகார மையமாக உருவெடுத்துள்ளார். தான் சார்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்துவதற்காக அவர் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார். “அமித் ஷா ஆதரவுடன் வரும் அமுதா ஜெயிப்பாரா? அல்லது திரிஷாவின் பரிந்துரையில் வரும் அதிகாரிகள் ஜெயிப்பார்களா?” என இப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் மிகப் பெரியபட்டிமன்றமே நடக்கிறது” என்றனர்.

“வெல்லப்போவது ஆழமா? இல்லை ஆளுமையா?” என்பதுதான் ‘கிளைமாக்ஸ்’ ட்விஸ்ட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago