தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்த திமுக – அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை, தனது முதல் தேர்தலிலேயே ஒற்றை ஆளாகத் தகர்த்து எறிந்துள்ளார் விஜய். 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக மாற்றியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழகத்தின் ‘அடுத்த முதலமைச்சர் யார்?’ என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டம் இப்போதுதான் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுகவின் ‘வாழ்வா – சாவா’ போராட்டம்!
தேர்தல் முடிவுகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, படுபாதாளத்தில் சரிந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு, இது அரசியல் ரீதியாக ஒரு வாழ்வா? சாவா? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போர். ஒருபுறம் திமுகவின் வீழ்ச்சி தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், மறுபுறம் ‘தவெக’ என்னும் புதிய சக்தியின் அசுர வளர்ச்சி அதிமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துள்ளது. அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை வளைத்து விஜய் ஆட்சி அமைக்க பாஜக தலைமை ‘மாஸ்டர் பிளான்’ தயாராகி வருவதை உணர்ந்த எடப்பாடியார், தனது கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிதறிவிடாமல் இருக்கவும், தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவும் வேறு வழியின்றி விஜய்க்கு ஆதரவளிக்கச் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எடப்பாடியார் வைக்கும் டிமாண்ட்களுக்கு விஜய் சம்மதிப்பாரா? என்றால் சாத்தியமில்லை.
மார்ட்டின் குடும்பத்தின் ஸ்கெட்ச்
இந்த மெகா அரசியல் காய்நகர்த்தல்களுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான குடும்பப் பின்னணி ஒளிந்திருக்கிறது. தவெக-வின் முக்கிய மூளையாகச் செயல்படும் ஆதவ் அர்ஜுனா ஒருபுறம், அவரது மாமியாரும் அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ் மார்ட்டின் மறுபுறம் என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருவேறு கட்சிகளில் இருந்துகொண்டு இந்த மகா கூட்டணியை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

“தவெகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இது சுமூகமாக முடியும்” என்று லீமா ரோஸ் வெளிப்படையாகவே அதிரடி கிளப்பியுள்ளார். ஆனால், அவர் “அண்ணன் எடப்பாடியார் ஆட்சி அமையும்” என்று கூறுவதுதான் இங்கே மாபெரும் ட்விஸ்ட்.
கோட்டையில் அமரப்போவது யார்?
காங்கிரஸிடம் பேசிய விஜய், இப்போது அதிமுக பக்கம் திரும்பியிருப்பது அரசியல் சதுரங்கத்தின் அடுத்த கட்டம். 10 இடங்களுக்காகக் காத்திருக்கும் விஜய், அதிமுகவின் ஆதரவைப் பெற்று ‘முதலமைச்சர்’ நாற்காலியில் அமர்வாரா? அல்லது “எடப்பாடியார் ஆட்சி” என்ற லீமா ரோஸின் கனவு பலிக்குமா? என்றால் வாய்ப்பில்லை. காரணம் மார்ட்டின் குடும்பம் நடத்தும் குலுக்கு சீட்டு குலுக்கல் அல்ல என்பது அறியாதவரா விஜய்?

எடப்பாடி பழனிசாமியால் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக முடியாவிட்டாலும், பழைய பழக்க தோஷத்தில் யாராவது முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற பேராசைப் பேய் மட்டும் ஆட்டிப்படைக்கிறது. சில, பல பலன்களை அனுபவிக்க சசிகலா எடப்பாடிக்கு முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்ததைப்போல விட்டுக்கொடுக்க விஜய் என்ன சசிகலாவா?” என கடுமையாக விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதே விமர்சகர்கள் கடைசியில் சொன்ன வார்த்தை ‘விஜய் சார்.. கால் பத்திரம்’..!
