விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 28 அன்று தமிழகம் முழுவதும் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்ட ஒரு போலியோ மையத்திற்கு அரசு அனுமதியின்றி முத்துவேல் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அங்கு பணியில் இருந்த அரசு ஊழியர்களிடம் அதிகாரி போன்று கேள்வி எழுப்பி ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவப் பணியாளர்களின் நடைமுறைகளை மீறி, ஒரு குழந்தைக்கு அவரே போலியோ சொட்டு மருந்து வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் முழுவதையும் பின்னணி இசையுடன் தொகுத்து, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் (Reels) வீடியோவாக அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசின் அனுமதி மற்றும் பொது சுகாதார நடைமுறைகளை மீறி, விளம்பர நோக்கத்திற்காக இவ்வாறு செயல்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவம் ஏற்கனவே சேலம் மாவட்டத்திலும் ஒரு தவெக நிர்வாகி தொடர்பாக எழுந்ததாகக் கூறப்படும் நிலையில், விருதுநகர் சம்பவமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
