https://republictn.com/

அமெரிக்காவின் மருத்துவத் துறை, சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிக செலவானதாக மாறி வருவதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண் பகிர்ந்துள்ள அனுபவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா (Victoria – Instagram: @lemonsnlyme) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியாவுக்கு மருத்துவர் பரிந்துரைத்த 6 சிறிய மாத்திரைகளுக்காக அமெரிக்காவில் 1,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 84 ஆயிரம் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் அந்த மருந்துக்கான செலவை ஏற்க மறுத்ததால், முழுத் தொகையையும் அவரே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வளவு அதிக தொகையைச் செலுத்த விரும்பாத விக்டோரியாவுக்கு, அவரது மருத்துவர் மாற்று வழி ஒன்றை பரிந்துரைத்தார். அதன்படி, மருந்துச் சீட்டை கனடாவைச் சேர்ந்த ஒரு மருந்தகத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தினார்.

அதன்பிறகு அந்த கனடிய மருந்தகம், இந்திய மருந்து உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக அதே மருந்தைப் பெற்று விக்டோரியாவுக்கு வழங்கியுள்ளது. இதற்காக அவர் செலுத்திய மொத்தத் தொகை வெறும் 25 டாலர்கள் மட்டுமே.

இதில் மருந்தின் விலை 10 டாலர்களும், சர்வதேச அனுப்புகை கட்டணம் 15 டாலர்களும் அடங்கும். இந்திய மதிப்பில் இது சுமார் 2,100 முதல் 2,300 ரூபாய் வரை மட்டுமே ஆகும்.

அமெரிக்காவில் 1,000 டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்ட அதே மருந்து, இந்தியாவில் வெறும் 10 டாலருக்குத் தயாரிக்கப்படுவதை அறிந்த விக்டோரியா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து தனது வீடியோவில் பேசிய அவர், “அமெரிக்க சுகாதார அமைப்பு ஒரு ஏமாற்று வேலை. அது ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மருந்துக்கு அமெரிக்காவில் ஏன் 1,000 டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன? இந்த கூடுதல் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் இந்தியாவின் தரமான மற்றும் மலிவான ஜெனரிக் மருந்து உற்பத்தித் துறையைப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், அமெரிக்காவின் லாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்பீட்டு முறை மற்றும் மருந்து நிறுவனங்களின் விலை நிர்ணய நடைமுறைகளையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் மலிவு விலை மருந்துகள் மற்றும் அவற்றின் உலகளாவிய முக்கியத்துவம் மீண்டும் ஒருமுறை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago