அமெரிக்கா -ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 8 அன்று எட்டப்பட்ட போர் நிறுத்தம் தற்போது முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்களது நிபந்தனைகளிலிருந்து பின்வாங்க மறுப்பதால், மத்திய கிழக்கில் மற்றொரு பெரும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
டிரம்ப் – சென்ட்காம் தளபதி சந்திப்பு
ஈரான் மீதான புதிய இராணுவ நடவடிக்கை குறித்த திட்டங்களை விவாதிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பரை விரைவில்சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைகளில் நிலவும் முட்டுக்கட்டையை உடைக்க அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு இறுதி அடியைக் கொடுக்க, பெரிய அளவிலான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்.
ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர சென்ட்காம் பல்வேறு உத்திகளை வகுத்துள்ளது. ஈரானின் உள்கட்டமைப்பு இலக்குகள் மீது சிறிய ஆனால் சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவதன் மூலம், அணுசக்தி விவகாரத்தில் ஈரானை வளைக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வணிகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் ஜலசந்தியின் ஒரு பகுதியைக் கைப்பற்ற தரைப்படைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம். ஈரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைப் பாதுகாக்க சிறப்புப் படைகளை அனுப்புவதும் ஒரு விருப்பமாக வைக்கப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘டார்க் ஈகிள்’ அதிவேக ஏவுகணைகளை மத்திய கிழக்கில் நிலைநிறுத்த சென்ட்காம் கோரிக்கை விடுத்துள்ளது. நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் இந்த அதிவேக ஏவுகணை அமைப்பு இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கூறப்பட்டாலும், தற்போதைய பதற்றமான சூழலில் முதன்முறையாக இதை நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவும், சீனாவும் இத்தகைய ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் எடுக்கப்போகும் முடிவே மத்திய கிழக்கின் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.
