https://republictn.com/

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என பெயர் சூட்ட தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாய்நாட்டிற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் சுமார் 16 கிலோமீட்டர் நீளமுடைய இந்த முக்கிய சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி கவுன்சில் இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது வீரமரணம் அடைந்தார்.

அவரது அபார துணிச்சல், கடமை உணர்வு மற்றும் தியாகத்தைப் பாராட்டி, இந்திய அரசு நாட்டின் உயரிய அமைதிக்கால ராணுவ விருதான “அசோக் சக்ரா” விருதை வழங்கி கௌரவித்தது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மற்றும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “அமரன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த திரைப்படம் அவரது தியாகத்தையும் வீரத்தையும் உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் சரத்குமார், மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 hours ago at 23 hours ago