https://republictn.com/

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி மாற்றங்களால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் பக்கமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ ஆகியோர் சாயத் தொடங்கியுள்ளதை உளவுத்துறை தகவல்கள் மூலம் திமுக தலைமை உறுதி செய்துள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில், மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ், ”பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சை கக்கும். அதுபோல் திமுக ஒரு நச்சுப் பாம்பு. தில்லுமுல்லுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். அவர்களுடன் இருக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்து. மதிமுகவை திமுக அழிக்க நினைக்கிறது. நல்லது செய்வதுபோல் தீங்கு செய்கிறது. தவெகவுடன் மதிமுக கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்” என வெளிப்படையாகவே போட்டுடைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மதிமுகவை அரசியல் ரீதியாக முடக்கும் வகையில் திமுக அதிரடியான ஒரு ‘மெகா ஆபரேஷனை’ கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தவெக-வுக்குப் போகும் வைகோ
வைகோ, துரை வைகோ ஆகியோர் பனையூர் நோக்கி நகர்வதற்கு முன்னதாகவே, மதிமுகவின் முன்னணி, இரண்டாம் கட்ட நிர்வாகிகளை மொத்தமாகத் திரட்டி அறிவாலயத்திற்கு இழுத்து வரும் வேலைகளை திமுக தற்போது முடுக்கிவிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, வைகோவுக்கு நெருக்கமான மதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து மு.க.ஸ்டாலினிடம் ‘அப்ளிகேஷன்’ போட்டிருந்தனர். ஆனால், அப்போது “அண்ணன் வைகோ கோபித்துக் கொள்வார். நீங்கள் அங்கேயே இருங்கள்” என்று கூறி திமுக தரப்பு அவர்களைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், தற்போது மதிமுகவின் முகாம் தவெக பக்கமாக மாறுவதை உணர்ந்துகொண்ட திமுக தலைமை, ஏற்கனவே தூது விட்ட அந்த முக்கிய மதிமுக தலைவர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சிதறும் மதிமுக
மதிமுகவில் இருந்து ஏற்கனவே வெளியேறிய மல்லை சத்யா, தனியாகக் கட்சி ஆரம்பித்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருந்தார். வைகோவின் மீதான மரியாதை காரணமாக மல்லை சத்யாவை நேரில் சந்திப்பதைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை தவிர்த்து வந்தார்.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளதால், மல்லை சத்யா உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒட்டுமொத்த மதிமுகவும் திமுக பக்கம்தான் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் ஒரு பிரம்மாண்ட ‘மெகா இணைப்பு விழா’-வை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

பொதுக்குழுவுக்கு முன் இணைப்பு?
மதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, இந்த மெகா இணைப்பு விழாவை நடத்தி முடிக்க அறிவாலயம் திட்டமிட்டு, அதற்கான பேச்சுவார்த்தைகளையும் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைகோவின் இந்த அரசியல் நகர்வுக்கு திமுக கொடுக்கப் போகும் இந்த அதிரடி பதிலடி, மதிமுகவிற்குள் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago